பொம்மலாட்டம் – பாகம் 29 – மான்சி தொடர் கதைகள்

“நீங்க சொல்றது புரியுது தம்பி…. நீங்க விரும்பும் போது கூட்டிட்டுப் போங்க” என்று பவானி கூறியதும் “சரி சரி சாப்பிட எதாவதுக் குடுங்க ஆன்ட்டி… ரெண்டு பேருமே சாப்பிடாமக் கூட கிளம்பி வந்துட்டோம்” என்றான் ஆதி….

புன்னகைத்த பவானி “இதோ எடுத்து வைக்கிறேன்…. வாங்க சாப்பிடலாம்” என்றுவிட்டு சமையலறைக்குச் சென்றாள்…. அவன் முகத்தையேப் பார்த்திருந்த மான்சியிடம் “சாப்பிடலாமா?” என்று கேட்டான்….. “நான் சாப்ட்டேனே… நிறைய சாப்பிட்டா அத்தானோட பாப்பாவுக்கு வலிக்கும்னு மம்மி சொன்னாங்க” என்றவள் சத்யனின் கையை எடுத்து தனது மேடிட்ட வயிற்றில் வைத்து “நம்ம பாப்பா” என்றாள் குதூகலத்துடன்….



வயிற்றிலிருந்த கையால் மெல்ல வருடியவன் “ம் ம்… குட்டிப் பாப்பா வரப் போகுது உன்னை மாதிரியே….” என்றான்…. “இல்ல இல்ல அத்தானைப் போலதான் பாப்பா வரும்னு மம்மி சொன்னாங்களே” என்று குழந்தையாய் தலையசைத்தவளை ரசனையோடுப் பார்த்தான் சத்யன்….

இருவரையும் ரசித்த ஆதி “டேய் பசிக்கிதுடா… அப்புறமா பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சிக்கோ” என்றதும் மனைவியுடன் எழுந்தான் சத்யன்…. சாப்பாட்டு மேசையில் அவனைத் தவிர வேறு எதையுமேப் பார்க்கவில்லை மான்சி…. இந்த புத்தம் புதிய மனைவியின் உணர்வுகளை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட சத்யனின் முகத்தில் புன்னகை மட்டுமே…

“ அழகின் அர்த்தமே அவள்தான் என்றேன்….

“ அழகென்பது அகமே… புறம் அல்ல…

“ என்று எனக்கு உணர்த்திய….

“ எனது ஊழி காலத்து உதயமே…

“ அழகான அந்த அகத்தில்…

“ நான் மட்டுமே என்று…

“ எனது கண்கள் கசிகின்றதடி!

மான்சியின் பெரிய விழிகளில் சத்யனைத் தவிர வேறொன்றும் பதியவில்லை போல….. தன்னையே நோக்கும் மனைவியை அதிசயமாகப் பார்த்தான் சத்யன்…. சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்தனர்….. சத்யனின் மனம் புரிந்ததால் மருமகன் எதிரே பணிவுடன் நின்றிருந்தாள் பவானி…… ஆதி எதிரில் அமர…. மான்சி சத்யனுக்கு அருகே அமர்ந்து கொண்டாள்…



“அத்தை… இன்னும் ஒரு மாசம் தான்… அதுவரைக்கும் மான்சி இங்கயே இருக்கட்டும்… நான் அடிக்கடி வந்துப் பார்த்துட்டுப் போறேன்…. டாக்டர், செக்கப் எதுக்காவது போகனும்னா எனக்கு கால் பண்ணுங்க… நான் வந்து அழைச்சிட்டுப் போறேன்” என்றான்… சரியென்று தலையசைத்த பவானி…. “நான் பேசினதை தவறா நினைக்காதீங்க…. அன்னைக்கு நிர்கதியா மான்சியோட வெளியேறின கோபத்துல பேசிட்டேன்” என்றாள் சங்கடமாக…

“எனக்குப் புரியுது அத்தை…. உங்க இடத்தில் நானே இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்துக்கிட்டிருப்பேன்….. வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டானே என்ற ஆத்திரத்தை உதறிட்டு என் குழந்தைக்கு மான்சியோட வயித்துல இடம் கொடுத்ததுக்கு நான்தான் நன்றி சொல்லனும்” என்றான்…. யார் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று புரியாமல் மூவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்த மான்சியைத் தோளோடு அணைத்து

See also  மனசுக்குள் நீ - பாகம் 19 - மான்சி தொடர் கதைகள்

“அம்மா சொல்றதைக் கேடிடுக்கிட்டு சமர்த்தா இருக்கனும்…. அத்தான் தினமும் வந்து பார்த்துட்டுப் போறேன்” என சத்யன் கூறியதும் கலவரமாயப் பார்த்த மான்சி…. “அத்தான் என்கூட இருக்கனுமே” என்றாள்… சத்யனுக்கும் இருக்கத்தான் ஆசை…. ஆனால் கம்பெனியைப் பார்க்க வேண்டும்… பிரசவ நாளை நெருங்கியிருக்கும் அக்காவையும் பார்த்துக் கொள்ள வேண்டும்… ஒன்றும் புரியாமல் ஆதியைப் பார்த்தான்….



‘இரு பார்த்துக்கலாம்’ என்பது போல் ஜாடை காட்டிய ஆதி ” இப்போ மான்சி தூங்குற டைம் கூட்டிட்டுப் போய் தூங்க வை சத்யா” என்றான்…. சத்யன் சம்மதம் கூறும் முன் மான்சி அவன் கையைப் பிடித்தபடி எழுந்து கொண்டாள்…. “ம் போகலாமா? அதோ அந்த ரூம்” என்று கைகாட்டினாள்….

சிறு சிரிப்புடன் அவளுடன் சென்றவன் திரும்பி ஆதியைப் பார்க்க… ‘நான் வெயிட் பண்றேன்’ என்று கையசைத்தான் ஆதி…. சற்றுமுன் மான்சி புகைப்படங்கள் காட்டிய அதே அறை… இவனை படுக்கையில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் சில படங்களை எடுத்து வந்தாள்…. அவளைத் தடுத்து படங்களை வாங்கி சுவற்றில் மாட்டிய சத்யன்… “எல்லாம் பார்த்துட்டேன்…. இப்போ நீ அத்தான் கூட சேர்ந்து தூங்கனும்… வா வா” என்று அழைத்துச் சென்று படுக்கையில் சாய்த்து தானும் பக்கத்தில் சரிந்தான்….

“அத்தானோட வீட்டுக்கு எப்போ போகனும்?” என்றவளின் கைகள் சத்யனின் கழுத்தை சுற்றியிருந்தது… “சீக்கிரமே போகலாம் கண்ணம்மா” என்றவன் அவள் முகத்தை தன் மார்போடு அணைத்துக்கொள்ள… சத்யனின் சட்டைக் காலரைப் பற்றியபடி சுகமாக உறங்க ஆரம்பித்தாள் மான்சி……

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் அப்படியே அணைத்த வாக்கில் படுத்திருந்தவன் மான்சி உறங்கிவிட்டதை உணர்ந்ததும் விலகியெழுந்தான்…. இவன் விலகியதை உணர்ந்தவளாக அவனிருந்த இடத்தை கையால் தடவிப்பார்த்தவளைக் கண்டு புன்னகைப் பூத்த முகமாக ஒரு தலையணையை எடுத்து அவளருகே வைத்து அதில் அவளது கையை எடுத்து வைத்தான்….



மான்சியைக் கவனித்துக் கொள்வதில் இனி தனது பொறுப்புகளும் கடமையும் என்னவென்று பூரணமாக புரிந்துகொண்டவனாக அறையிலிருந்து வெளியே வந்தான்…பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்த ஆதி நிமிர்ந்துப் பார்த்து “தூங்கிட்டாளா?” என்று கேட்க…. ஆம்மென்று தலையசைத்த சத்யன் தரையில் அமர்ந்து காய்கறி நறுக்கிய பவானியின் எதிரே வந்து நின்றான்… நிமிர்ந்த பவானி “சும்மாவே உங்க ஞாபகம் வந்தால் அத்தானைப் பார்க்கனும்னு பயங்கரமா ஆர்பாட்டம் பண்ணுவா….

இப்போ உங்களை நேர்ல பார்த்ததும் இன்னும் அதிகமாப் படுத்தப் போறா… எப்படி சமாளிக்கப் போறேனோத் தெரியலை?” என்றாள் கலக்கமாக… லேசாகச் சிரித்தான் சத்யன் “உடனே எனக்கு கால் பண்ணுங்க அத்தை… நான் வந்துடுவேன்… இன்னும் ஒரு மாசம் சமாளிச்சிட்டோம்னா போதும்….. அப்புறம் என் வீட்டுக்குக் கூட்டிப் போய்டுவேன்” என்று சமாதானப்படுத்திவிட்டு ஆதியுடன் புறப்பட்டான்….

See also  மனசுக்குள் நீ - பாகம் 45

வரும் வழியில் நண்பனை நன்றியோடுப் பார்த்த சத்யன் “பிரெண்ட் அப்படின்றதையும் தாண்டி நீ எனக்கு ஒரு தகப்பனாக இருந்து வழி நடத்திருக்க ஆதி” என்றான் கண்கலங்க…. காரைச் செலுத்தியபடி நண்பனின் தோளில் கைவைத்து ஆறுதலாக அழுத்திய ஆதி “முதல்ல என் நண்பனை ஏமாத்திட்டாங்களே அப்படின்னு எனக்கும் ஆத்திரமாத்தான் இருந்தது சத்யா…



ஆனா மான்சியோட நோய் யாரும் வேண்டுமென்று ஏற்படுத்திக் கொண்டது இல்லை…. இது பிறவிக் குறைபாடு… இதுக்காக ஒரு சிறு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதானு ரொம்ப வேதனையாயிருந்தது… என்னைக்காவது நீ புரிஞ்சு மான்சியை ஏத்துக்குவேன்ற நம்பிக்கையில தான் நான் இதையெல்லாம் செய்தது” என்றான் ஆதி…

“ம்…. இது நோயல்ல ஒரு குறைபாடுதான்னு எனக்கும் இப்போ புரியுது ஆதி… உன் உதவியை என் உயிர் இருக்கிறவரை மறக்கமாட்டேன்டா” என்றான் உணர்ச்சிப்பெருக்கில்… “ஸ் ஸ்… பெரிய வார்த்தைலாம் பேசாதேடா….” என்று அதட்டிய ஆதி “உன்கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லனும் சத்யா” என்றான்….

Leave a Comment

error: read more !!