பொம்மலாட்டம் – பாகம் 01 – மான்சி கதைகள்

நிலவு,, புதுமணப் பெண் போல புதுப் பொலிவுடன் விண்ணில் உலா வர நட்சத்திரங்கள் ஒன்று கூடி நிலவுக்கு விழா எடுக்கும் பொன் மாலை …. மின்மினி பூச்சிகளோ … நாங்களும் விழாவில் கலந்து கொள்வோமென்று நட்சத்திரங்களுடன் போட்டியிடப் புறப்படும் மாலைப் பொழுது … அழகான அத்தனைக்கும் அந்திமாலை துணை நிற்க… பூக்கள் மலருவதும்.

பூவையர் சிரிப்பதும் …. பூமித்தாய் குளிர்வதும் இந்த மாலைவேளையில் தான் … ஏழ்மைக்குக் கூட உறக்கமெனும் இரக்கம் காட்டுவது நிலவும் இரவும் மட்டும் தான் …. சந்தனக் குழம்பும் ஜவ்வாது வாசனையுமாக வலம் வரும் காளையரின் கண்ணசைவில் கடலளவுக் காதலை கண்டு கொள்ளும் பெண்டிர் விளக்கேற்றி வைத்து விட்டில்கள் போல் விழியசைத்து விருத்திக்கு உதவுவதும் நிலவும் இரவும் தான் …..



நிலவைப் பெண்ணோடு ஒப்பிடக் காரணம் குளிர்ச்சியும் அழகும் மட்டும் தானா? இல்லை தாய்மையும் அடங்கிருக்கிறது ….ஆம் நிலவுக்கு தாய்மையுண்டு …. பகலில் சூரியனின் தகிப்பில் தவித்த தன் மக்களை தனது குளிர்ச்சியால் தாலாட்டுப்பாடி தன் மடியில் தூங்க வைப்பதும் தாய்மை தான் …. எப்பேர்ப்பட்ட வீரனாயினும் தாயின் முன்பு எவனும் ஆயுதம் ஏந்த மாட்டான் என்பதை வலியுறுத்துவது போல் பொழுது சாய்ந்து வானில் நிலவு நீந்தும் வேளையில் கடும் போரினைக் கூட நிறுத்தி இருக்கின்றனர் …

இதுவும் தாய்மையை உணரும் செயல் தான் …. பல அற்புதங்களையும் ரகசியங்களையும் தனக்குள் பதுக்கி வைத்துள்ள இந்த இரவும் நிலவும் தனது முழு ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்த வேளை …. கோவையின் காந்திபுரத்தில், முக்கியஸ்தர்களும் தொழிலதிபர்களும் வசிக்கும் பிரபலமான வீதி… ” அன்பே சிவம் ” என்று சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் கொண்ட அந்த அழகான சிறிய பங்களா …..



வாசலில் வாழை மரமும் தாழம்பூ தோரணமும் என பிரமாண்டமாகப் போடப்பட்டிருந்த தஞ்சாவூர் பந்தல் … பந்தலுக்குள் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்த சீருடையணிந்த ஊழியர்கள் …. பார்த்தவுடனேயேக் கூறிவிடலாம் இது திருமண வீடென்று …. முதல் வாயிலில் மயில் தோகை விரிப்பது போல் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக் கதவே அந்த வீட்டில் உள்ளவர்களின் ரசனைச் சொல்லிவிடும் …. வீட்டின் தலைவி வாசுகி ….. நிறைந்த சௌபாக்கியவதி ….

நல்லவனாக ஒரு வல்லவன் கணவனாகவும் …. தேவதைகளின் தூதுவள் போல் ஒரு சின்னத் தாமரையாக மகளும் தமக்கையின் சொல்லை தலையில் தாங்கும் தமையனாக ஒரு அன்புத் தம்பியும் கொண்டவள் தான் வாசுகி ….வாசுகியின் பெற்றோர் பல வருடங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் இருவரும் ஒன்றாக சிவலோகப் பதவியடைந்து விட பதினேழு வயது தம்பி சத்யமூர்த்தியை தன்னுடனேயே கணவன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள் … அவள் கணவன் மதியழகன் … இவன் மதி மட்டும் அழகல்ல …

மனமும் அழகானவன் … அடைக்கலமாக வீடு வந்த மைத்துனனை தனது மூத்த மகனாகவே இந்த பத்து வருடங்களாக பாவித்து வருபவன் …. மதியழகன் வாசுகி தம்பதியருக்கு ஏழு வயதில் சிறகில்லா தேவதையாக அம்ருதா என்றொரு மகள் …. அவளுக்கு மாமன் சத்யன் மட்டுமே உலகம் … சத்யனும் பெற்றோரை இழந்த துயரத்திற்கு மருந்தாகக் கிடைத்த அந்த மலர் குவியலை எப்போதும் பிரியமாட்டான் …



சத்யனுக்கு கோபியில் சொந்தமாக நிலங்களும் வீடும் இன்னும் சில சொத்துக்கள் இருந்தும் அவற்றை ஞாபகச் சின்னமாக வைத்து விட்டு டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங் முடித்து விட்டு மதியழகனுக்குச் சொந்தமான சிறிய பனியன் தொழிற்சாலையிலேயே இவனும் இணைந்து உழைத்து சிறியதைப் பெரியதாக்கியிருக்கின்றனர் …. அழகான குடும்பம் …. தேவைகேற்ப சொத்துக்களும் வருமானமும் ….

கச்சிதமாக குடும்பத்தை நிர்வகிக்கும் அக்கா …. அவளது சொல்லுக்குக் கட்டுப்பட்டு கைகட்டி நிற்கும் மதியையும் சேர்த்து மூன்று பிள்ளைகள் …. இருந்த சிறிய வீட்டை விற்றுவிட்டு இரு வருடங்களுக்கு முன்பு தான் இந்த வீட்டைக்கட்டி குடிவந்திருந்தனர் …. புது வீட்டிற்கு வந்த நேரம் சத்யனுக்கும் திருமணம் கூடி வந்து விட்டது …. இரண்டு வருடமாகத் தேடி இப்போது தான் இந்தப் பெண் அமைந்து எல்லாம் பேசி முடித்து இதோ நாளை விடிந்ததும் திருமணம் என்ற நிலையில் வந்து நிற்கின்றது ….

கையில் மொபைலை வைத்துக் கொண்டு பரபரப்பாக நடந்தபடி பேசிக்கொண்டிருந்த வாசுகி “ஏங்க,, இங்க சத்யனுக்கு மாலை இன்னும் வரலை …. போன் பண்ணி என்னன்னு கேட்டீங்களா ?” என்று வாசுகி அதட்டியதும் ….. ” வந்துடும் வாசு … நான் மண்டபத்துல இருக்கிறதை கவனிக்கிறதா ? இல்ல மாலைக்குப் போன் பண்றதா ? கொஞ்சம் வெயிட் பண்ணு வாசு இப்ப வந்துடும் ” என்று மதி போனில் சொல்லும் போதே இங்கே வீட்டிற்கு மாலை வந்து விட்டது …



” ம் மாலை வந்துடுச்சுங்க …. நீங்க பொண்ணு வீட்டுல கிளம்பிட்டாங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுடுங்க ” என்று அடுத்த உத்தரவைக் கூறிவிட்டு தனது மொபைலை அணைத்து வைத்தவள் மாலையை வாங்கிக் கொண்டு மாடிக்கு ஓடினாள் … மாடியிலிருக்கும் சத்யனின் அறை …. கதவைத் தட்டிவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தவள் ” ரெடியாகிட்டயா அப்பு ?” என்று கேட்டாள் … இந்த அப்பு என்ற அழைப்பு வாசுகிக்கு மட்டும் பிரத்யேகமானது ….

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!