பொம்மலாட்டம் – பாகம் 17 – மான்சி தொடர் கதைகள்

“ம் ஓகே சத்யன்… இப்போ உங்களுக்கு சம்மதமென்றால் சில டெஸ்ட்டுகளுக்குப் பிறகு மான்சிக்கான மனரீதியான சில பயிற்சிக்களைத் தொடங்கலாம்” என்று டாக்டர் செபாஸ்ட்டியன் கேட்டார்… பவானி மற்றும் ஆதியின் பார்வை சத்யனிடன் திரும்ப…

அவனோ மான்சியின் முகத்தைக் கூர்ந்து விட்டு டாக்டரிடம் திரும்பி “இல்ல டாக்டர்… முதல்ல என் பேமிலிக்குத் தெரியவேண்டாம்னு தான் நினைச்சேன்… ஆனா இப்போ என் அக்கா மாமாவுக்கு மான்சியைப் பத்தித் தெரியனும்… அவங்க என்ன சொல்றாங்களோ அதன் படி தான் அடுத்த நடவடிக்கை எடுக்கனும்னு முடிவு பண்ணிருக்கேன்…



அதனால வீட்டில் பேசிப் பிறகு தான் மான்சிக்கு என்ன செய்றதுன்னு யோசிக்கனும்” என்றான் தீர்மானமாக… “இட்ஸ் ஓகே சத்யன்… ஆனா மான்சி நிச்சயம் பைத்தியமோ மனநோயாளியோ கிடையாது…. இது ஒரு வளர்ச்சிக் குறைபாடு தான்… இவள் ஓர் உயிருள்ள பெண்…

இவள் உங்க மனைவி அப்படின்றதை மனதில் வைத்து முடிவு பண்ணுங்க சத்யன்” என்று டாக்டர் கூறியதும் சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து கொண்டான்…. டாக்டரிடமிருந்து விடைபெற்று வெளியே வந்து காரில் ஏறினார்கள்….. சத்யனின் இறுக்கம் பவானிக்குக் கலவரத்தை ஏற்படுத்தியது…. “என்னை மன்னிச்சிடுங்க தம்பி… மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு எல்லாத்தையும் மறைச்சிட்டேன்” என்றாள் வேதனையாக….

பின்னால் திரும்பிப் பார்த்தவன் “மன்னிப்பா? இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துட்டு எவ்வளவு சாதரணமா கேட்குறீங்க? என்னோட தாம்பத்தியத்தையே கேவலப்படுத்திருக்கீங்க” என்று ஆத்திரமாகப் பேசியவனின் தோளில் ஆதி கை வைக்க… சற்று நிதானப்பட்டு



“இல்ல மன்னிப்போ தண்டனையோ எதையும் என் அக்கா தான் முடிவு பண்ணனும்..” என்றான் முடிவாக…. பவானியும் ஆதியும் இறுகிப் போயிருந்த சத்யனை கலவரமாகப் பார்க்க…. இவை எதையும் உணராத மான்சி அதே சிரிப்பு மாறாத முகத்துடன் காரின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள்….

” கபடும் சூதும் அறியாத..

” வெள்ளை பூவாக இவள்…

” தனக்கு நேர்ந்ததும்..

” இனி நேரப் போவதும்…

” புரியாதப் புன்னைகைப் பூவாக….

” பூவை இவள்…

” ஏந்திழையின் இதயத்தை அறிவது..

” அரிய வாய்ப்பாகிவிட்டதே!

வீடு வந்து சேர்ந்தனர்…. பசுமை மங்கிய வாழைமரங்களும் தென்னங்கீற்றுக் கூரையும் தாழம்பூத் தோரணங்களுமாகக் காய்ந்து போயிருந்த கல்யாணப் பந்தல் இன்னும் கலைக்கப்படாமல் அப்படியே இருக்க… “என் வாழ்க்கை மட்டும் நீர் மேல் இட்ட கோலமாய் நிமிடத்தில் கலைந்து போனதேன்?”



ஆத்திரத்தில் தோரணங்களைப் பிய்த்து எறிந்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தான்… மான்சியின் மேல் காதல் இருந்தது தான்… அந்த அழகும் சோபையும் அவனை மயக்கியது தான்…. ஆனாலும் இனி ஒரு பொம்மையை நேசிக்க அவன் தயாராக இல்லையென்று அவனது செய்கைகள் உணர்த்தியது…

மடாரென்று திறக்கப் பட்ட கதவின் ஒலி கேட்டு சமையலறையிருந்து வெளியே வந்தாள் வாசுகி…. மதிய உணவிற்காக வந்திருந்த மதியும் சப்தம் கேட்டு வெளியே வந்தான்…. கோபமும் ஏமாற்றமும் கண்கள் சிவக்க வைத்திருக்க… முரட்டு உதடுகள் மூர்க்கமாகத் துடிக்க…. மனதின் கலவரத்தில் கைகள் நடுங்க நின்றிருந்த தம்பியைப் பார்த்ததும் பதறி அருகே வந்தாள்… தனது தளிர் விரல்கள் தம்பியின் முகத்தை வருடியவள்

“என்ன அப்பு?” என்று அன்பாகக் கேட்க… அத்தனை அன்பு கொண்டவளின் அந்த ஆறுதல் வார்த்தையே சத்யனை உடைத்துப் போட்டது…. தனது வாழ்க்கையே ஏமாற்றத்தின் சின்னமாகிப் போனதைப் பொறுக்க முடியாதவன் போல் “அக்கா…….” என்ற கதறலோடு மற்றொரு தாயாகத் தனக்குக் கிடைத்தவளை இறுக அணைத்துக் கொண்டான்…. தம்பியின் கண்ணீர் வாசுகியையும் உடைத்துப் போட்டது…. “அப்பு….. அப்பு…. ” என்று அவளும் அழ ஆரம்பித்தாள்…..



வாசுகி எப்போதும் இப்படித்தான்…. சிறு வயதிலிருந்தே தம்பி எதற்காக அழுகிறான் என்று கூட தெரியாமல் அதன் காரணத்தைக் காணாமல் தம்பியின் கண்ணீரை மட்டுமே காண்பவள்… இப்போதும் அப்படித்தான்… தம்பி அழுகிறான் என்றதும் நெஞ்சு கலங்க… வயிறு கொதிக்க…. ” அப்பு… அப்பு…” என்று அழுகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள்…

சில நிமிடங்கள் குழப்பமாக நின்ற மதி சட்டென்று சுதாரித்து இவர்களின் அருகே வந்து மனைவியின் தோள்ப் பற்றி சத்யனிடமிருந்து விலக்கி நிறுத்தி “வாசு,, கொஞ்சம் அமைதியா இரு…. என்ன விஷயம்னு தெரியாம நீயும் அவன் கூட சேர்ந்து அழுதா அது சரி கிடையாது… மொதல்ல விசாரிப்போம்” என்றதும் ஆதியும் மதியுடன் சேர்ந்து கொண்டான்….

“அமைதியா இருங்கக்கா… ஒன்னுமில்லை…” என்று ஆறுதல் கூறியபடி இருவரையும் அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினான்…. மதி திரும்பி பவானியையும் மான்சியையும் பார்த்தான்…. சத்யனின் கண்ணீரைக் கண்டு மிரண்டவளாக தாயின் பின்னால் பதுங்கி நின்றிருந்தாள் மான்சி…. ஏதோ நடந்திருக்கின்றது என்று தெளிவாகப் புரிய ஆதியைப் பார்த்து

“உங்க வீட்டுக்குப் போன இடத்தில் ஏதாவதுப் பிரச்சனையா ஆதி?” நேரடியாகக் கேட்டான்…. ஆதிக்கு எப்படித் தொடங்குவது என்று தயக்கமாக இருந்தது…. நண்பனிடம் உடைத்துப் பேசி தோள் கொடுத்துத் தாங்கியதென்பது வேறு… இப்போது இது இரு குடும்பம் சம்மந்தப்பட்டப் பிரச்சனையாகிவிட்டது…. சங்கடமாக சத்யனைப் பார்த்தான்…



“என்னை ஏன்டா பார்க்கிற? உனக்குத்தான் எல்லாம் தெரியுமே? நீயே சொல்லுடா” சத்யனின் குரல் ஆத்திரத்துடன் ஒலித்தது…. “என்ன ஆதி நடந்துச்சு? யாராவது ஒருத்தன் சொல்லுங்களேன்டா” வாசுகி இறைஞ்சுதலாகக் கேட்க… ஆதி வாசுகியின் அருகில் அமர்ந்து கைகளைச் சேர்த்துப் பிடித்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு கண் கலங்கினான்….

“விஷயம் நம்ம சத்யனோட லைப் சம்மந்தப்பட்டது அக்கா… அதை நான் எப்படி போட்டு உடைக்க முடியும்?” என கூறும் போதே பவானியின் அழுகை சப்தம் கேட்டது…. பவானியின் அழுகை மேலும் கலவரப்படுத்த… “எனக்கு நீ வேற சத்யன் வேற கிடையாது ஆதி… நடந்ததைச் சொல்லு” என்று அதட்டினாள் வாசுகி…



Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!