மனசுக்குள் நீ – பாகம் 18 – மான்சி தொடர் கதைகள்

அவள் மனம் முழுவதும் சத்யன் நினைவுகளை தவிர வேறு எதுவுமில்லை,, நான் வீட்டுக்குள் வரவில்லை என்றதும் வருந்தியிருப்பானா? அல்லது மனதுக்குள் கோபமாக திட்டியிருப்பானா? எது எப்படியே அவன் மனதில் சந்தோஷம் மட்டும் நிச்சயம் இருந்திருக்காது,, அவன் பிடிவாதம் தளரும் வரையில் அவனை பார்க்காமல் தன்னால் இருக்கமுடியுமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தலையனையில் சாய்ந்தாள் மான்சி

அன்று முழுவதும் நடந்ததை மனதில் அசைபோட்டவாறு கண்ணயர்ந்தவளை மொபைலின் ஒலி தட்டி எழுப்பியது,, எடுத்து யாரென்று பார்த்தாள்,, அனிதாதான் அழைத்திருந்தாள்

உடனே ஆன் செய்து “ என்ன அனிதா,, வீட்டுக்கு போயாச்சா?” என்று மான்சி கேட்க



“ நான் அனிதாவோட அம்மா பேசுறேன் மான்சி” என்று ரஞ்சனாவின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் கேட்டது

இந்த நேரத்தில் இவங்க ஏன் போன் பண்ணாங்க என்று எண்ணி குழம்பியபடி “ என்னாச்சு ஆன்ட்டி சொல்லுங்க,, அனிதா வசு வீட்டுக்கு வந்துட்டாங்க தானே” என்று மான்சி பதட்டமாக கேட்டாள்

“ அதெல்லாம் வந்துட்டாங்கம்மா, நான் உன்கூட பேசனும்னு தான் போன் பண்ணேன் ” என்று ரஞ்சனா கூறியதும்

“ சொல்லுங்க ஆன்ட்டி,, என்ன விஷயம்” என்றாள் மான்சி

“ என்னம்மா இப்படி பண்ணிட்ட,, இப்பத்தான் அனிதா சொன்னா,, எங்களுக்காக நீ சத்யாவை ஒதுக்காத மான்சி,, அவன் ரொம்ப பிடிவாதக்காரன்,, அப்புறம் எங்களுக்கு நீ சப்போர்ட் பண்றேன்னு உன்னையும் வெறுத்துட போறான்,, தயவுசெஞ்சு நீயாவது அவன்கூட சேர்ந்து இரும்மா,, அவனோட தனிமைக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்” என்று ரஞ்சனா சொல்லும்போதே குரல் கம்மி அழுகை வெடித்தது



மான்சிக்கு ரஞ்சனாவின் நிலை புரிந்து சங்கடமாக இருந்தது, “ அய்யோ ஆன்ட்டி ப்ளீஸ் அழாதீங்க,, நான் உங்களுக்காக ஒன்னும் இதெல்லாம் பண்ணலை,, எனக்கு வரும் புருஷனுக்கு அம்மா, அப்பா, தங்கைகள்னு ஒரு குடும்பம் இருக்கனும்னு நான் நெனைக்கிறேன்,, அவரோடு சேர்ந்து நானும் தனிமையோடு போராட முடியாது ஆன்ட்டி,, என் மனசு உங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன்” என்று மான்சி தெளிவாக கூறினாள்

எதிர்முனையில் சிறிதுநேர விசும்பலுக்கு பிறகு “ அதை நீ சத்யாவை கல்யாணம் பண்ண பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையா எடுத்து சொல்லி புரியவைக்கலாமே கண்ணு,, இப்பவேன்னா அவன் மனசு வெறுத்துடப் போறான் மான்சி” என்று ரஞ்சனா வருத்தத்துடன் கூற…

“ இல்லைங்க ஆன்ட்டி இப்போ என் காதலை பணையம் வைக்க என்னால் முடியும்,, திருமணத்திற்கு பிறகு என்னோட தாலியை பணையம் வைக்கமுடியாது,, நீங்க பொறுமையா இருங்க ஆன்ட்டி எல்லாம் நன்மையில் முடியும்” என்று மான்சி தன் நிலையை சொன்னாள்

“ நீ சொல்றது புரியுதுமா,, ஆனா காதலுக்கு இருக்கும் சக்தியைவிட,, கல்யாண வாழ்க்கைக்கு சக்தி அதிகம்,, சரிம்மா உன் இஷ்டப்படி செய்,, எப்படியோ எங்க பிள்ளை எங்ககிட்ட வந்துட்டா போதும்,, உன்னோட முயற்சி வெற்றியடைய அந்த ஓம்சக்தி தாயை மனசார வேண்டிக்கிறேன் மான்சி,, முடிஞ்சா நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வாம்மா,, சரி நான் வச்சிர்றேன், நேரமாகுது நீ தூங்கும்மா” என்று கூறி போன் காலை கட் செய்தாள் ரஞ்சனா



மான்சி தனது கையிலிருந்த மொபைலையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்,, அன்று முழுவதும் ஏற்பட்ட அலைச்சலும்,, மன உளைச்சலும் சேர்ந்து மான்சியை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச்சென்றது

மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விடிந்தாலும்.. மான்சிக்கு சோர்வாக இருந்தது,, இன்று சத்யனை பார்க்கமுடியாதே என்று மனம் ஏங்கியது,, ஆனால் முன் வைத்த காலை பின்வைக்கவும் மனசில்லை,, எப்படியாவது சத்யனுடன் ஜோடியாக கிருபா ரஞ்சனா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்ற ஆசை மற்ற எல்லாவற்றுக்கும் தடை விதித்தது

மான்சிக்கு ஒன்று மட்டும் இன்னும் தெளிவாகவே இல்லை,, அதாவது கிருபானந்தன் இவ்வளவு நல்லவராக இருந்தும், மனைவி உயிருடன் இருக்கும் போது ஏன் இன்னொரு பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டார்,, என்ற விஷயம் மட்டும் மான்சிக்கு இன்னும் தெரியாது,, இதை யாரிடமும் கேட்டும் தெரிந்துகொள்ள முடியாது,,

எவ்வளவோ விஷயங்களை பேசியுள்ள அனிதாகூட தனது பெற்றோரின் உறவுமுறை எப்படி ஏற்ப்பட்டது என்று மான்சியிடம் சொன்னதில்லை,, ரஞ்சனாவின் முகத்தோற்றமும்,, நடத்தையும் அவங்க தப்பானவங்க அல்ல என்று மட்டும் உணர்த்தியது



ஆனால் இந்த விஷயம் தெளிவானால் மட்டுமே சத்யனின் மனதை மாற்ற முடியும்,, அவன் மனதில் ரஞ்சனா இன்னும் ஒரு வில்லியாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறது,, அது மாறவேண்டும் என்றால், ரஞ்சனா கிருபா இவர்களுக்குள் இருக்கும் உண்மைகள் வெளிவரவேண்டும்,,

சத்யன் நினைப்பதுபோல தனது அம்மா உயிருடன் இருக்கும்போது இன்னோரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தார் என்பது உண்மையாக இருந்தால் சத்யனை யாராலும் மாற்றமுடியாது,, எனது முயற்ச்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரைப் போல் பயனில்லாமல் போய்விடும்,, என்று மான்சியின் மனது வருந்தியது

அவளுக்கும் இப்போது சந்தேகமாக இருந்தது,, ரஞ்சனாவின் கண்ணீரை வைத்து நடந்தது என்ன என்று தெரியாமலேயே இப்படியொரு முடிவெடுத்தது தவறா?,, சத்யனின் நிலையில் இருந்து பார்த்தால் அவன் செய்தது முழுக்க முழுக்க நியாயமானது,, கிருபா ரஞ்சனா இவர்களின் நடத்தைக்கு காரணம் தெரிந்தால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்

கிருபா ரஞ்சனா இவர்களின் நடவடிக்கைக்கு காரணம் வெறும் உடல் இச்சை தான் காரணம் என்றால் நானேகூட அவர்களை ஒதுக்கிவிடுவேன் என்று மான்சி மனதுக்குள் உறுதியாக எண்ணினாள்



அன்று ஆபிஸில் எந்த மாறுதலும் இல்லாமல் அமைதியாக போனது,, மான்சி சொன்ன சொல் மாறாமல் ரிப்போர்ட்டை பியூன் வசம் கொடுத்தனுப்பினாள்,, அவர்களின் நிலை கார்த்திக்கு தர்மசங்கடமாக இருந்தாலும் இருவரையும் எதுவும் கேட்க்கவில்லை,,

டிசைனிங் சம்மந்தமாக இரண்டு முறை மான்சியை பார்க்க அவள் பகுதிக்கு சென்றபோது கூட மான்சியிடம் எதுவும் கேட்கவில்லை

முதல்முறை வேலை சம்மந்தமாக மட்டுமே பேசிய மான்சி, இரண்டாவது முறை இரண்டு மூன்று கார்த்திக்கை சங்கடமாக பார்த்தாள்,,

அவள் ஏதோ சொல்ல தவிக்கிறாள் என்று புரிந்துகொண்ட கார்த்திக் “ என்ன சொல்லனும் சொல்லுங்க மான்சி” என்று ஆதரவாக கேட்டான்

அவனுடைய அன்பான பேச்சு தனது அண்ணன் ஜெகனை ஞாபகப்படுத்த,, மான்சிக்கு கண் கலங்கியது,, விழி நீரை வழியாமல் உள்ளிழுத்தபடி “ அவர் எப்படியிருக்கார் சார்,, மதியம் கேன்டீனுக்கு கூட வரலை,, என்ன சாப்பிட்டாரு?” என்று கவலை தோய்ந்த குரலில் மான்சி கேட்க



சத்யன் மீதான அவளின் அக்கறை கார்த்திக்கை நெகிழச் செய்தது,, “ பாட்டி இன்னிக்கு காலையிலே வந்துட்டாங்க மான்சி,, பாட்டி வந்ததும் சாப்பாடு வீட்டுலேர்ந்து வந்துருச்சு,, அதான் பாஸ் கேன்டீன் வரலை” என்ற தகவலை மான்சிக்கு கூறினான் கார்த்திக்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!