மனசுக்குள் நீ – பாகம் 25

அங்கே எடுத்ததும் “ வசிம்மா நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்,, என்ன விஷயம்னு வீட்டுக்கு வந்து சொல்றேன்,, நீ சாப்பிட்டு தூங்கு,, சத்யனையும் சாப்பிட வை” என்ற கிருபா இணைப்பை துண்டித்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்

எங்கே போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை,, அவள் முகத்தில் லேசாக நம்பிக்கையின் ஓளி தெரிந்தது

பல கிலோமீட்டர் தூரம் கடந்ததும் கார் ஒரு மண்சாலையில் திரும்பியது,, நிலவின் வெளிச்சத்தில் கோவைக்கு வெளியே ஏதோவொரு கிராமம் என்பது தெரிந்தது,, இரண்டுபக்கமும் வயல் சூழ்ந்த இடமாக இருந்தது

கார் ஒரு ஓட்டு வீட்டின் முன்பு நின்றது,, கதவை திறந்து இறங்கிய கிருபா மறுபக்கம் வந்து கார் கதவை திறந்து “ இறங்கு ரஞ்சனா” என்றான்
மெதுவாக இறங்கிய ரஞ்சனா சுற்றும் முற்றும் பார்த்தாள்,, சுற்றிலும் நிலமும் நடுவே ஒரு பழைய ஓட்டு வீடும் இருந்தது,,

“ என்ன பார்க்கிற,, இது என் வீடுதான்,, என் அப்பா அம்மா முதன்முதலில் வாழ்ந்த வீடு,, அதை மாற்றக்கூடாதுன்னு என் மனைவியின் உத்தரவு,, அதனால ஒரு வயசான கணவன் மனைவியை பாதுகாப்புக்காக போட்டு வீட்டையும் நிலத்தையும் பார்த்துக்கிறேன்,, நீ கொஞ்சநாளைக்கு இங்கே தங்கியிரு,, அதன்பிறகு என்ன செய்றதுன்னு முடிவு பண்ணலாம் ” என்றவன் வீட்டை நெருங்கி “கந்தா ” என்று கூப்பிட்டு கதவை தட்டினான்

கொஞ்சநேரத்தில் கதவு திறக்கப்பட்டது ,, ஒரு வயதான மனிதர் கதவை திறந்து வெளியே வந்து “ வாங்க சின்னய்யா” என்று காவியேறிய பற்களுடன் புன்னகைத்து வரவேற்றார்

ரஞ்சனாவுடன் உள்ளே போனான் கிருபா,, வீடு மிக சிறியதாக இருந்தது,, சுற்றிலும் தாழ்வாரமும் நடுவே பெரிய முற்றமும்,, தாழ்வாரத்தை கடந்தால் எதிரெதிராக இரண்டு அறைகளும் அதற்க்கு பின்னே சமையலறையும் தோட்டமும் இருந்தது,, இரண்டு அறையில் ஒன்று படுக்கையறையை போல பழைய காலத்து மரக்கட்டிலுடன் இருந்தது,, எதிரே இருந்த அறை பூஜை அறையாகவும் அதிலேயே மூட்டை முடிச்சுகளை அடுக்கி வைக்கவும் பயன்பட்டது

பின்னால் இருந்து வயதான பெண்மணி வந்தார்,, கிருபாவை பார்த்ததும் அருகில் வந்து கன்னத்தை தடவி “ சின்னராசாவா வாங்க வாங்க” என்று சந்தோஷமாக வரவேற்றவர் கிருபாவின் பக்கத்தில் இருந்த ரஞ்சனாவை பார்த்து “ யாருங்க ராசா இந்த புள்ள,, அம்மன் சிலையாட்டம் இம்புட்டு அழகா இருக்கு’’ என்று வியப்புடன் கேட்டார்

அவர் சொன்னதற்கு பிறகுதான் திரும்பி தன்பக்கத்தில் இருந்த ரஞ்சனாவின் அழகை உற்று கவனித்தான், தெய்வீகமான அழகுதான் ஆனால் இந்த அழகு ஒரு சாத்தானுக்கு படைக்கப்பட்டு விட்டதே என்று வருத்ததுடன் நினைத்தான்

அவன் கூர்மையுடன் பார்த்ததும் ரஞ்சனா தலையை குனிந்துகொண்டாள்

திரும்பி அந்த மூதாட்டியை பார்த்து “ அன்னம்மா இவங்க என் நண்பனோட தங்கச்சி,, அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்து போய்ட்டாங்க,, என் நண்பனும் வெளியூருக்கு போய்ட்டதால் ஒரு பாதுகாப்புக்காக இங்கே கூட்டி வந்தேன்,, இப்போதைக்கு என்னை வேற ஒன்னும் கேட்காதீங்க,, இவங்க கிட்டயும் எதுவுமே கேட்காதீங்க, பெத்தவங்களை இழந்த சோகத்தில் அழுதால் ஆறுதல் சொல்லுங்க,, உங்களை நம்பித்தான் விட்டுட்டு போறேன் கவனமா பார்த்துங்க அன்னம்மா” என்று கூறிவிட்டு ரஞ்சனாவிடம் திரும்பினான்

“ ரஞ்சனா இவங்க அன்னம்மா கிட்டத்தட்ட என் தாத்தா காலத்தில் இருந்து எங்ககூட இருக்காங்க, அவர் கந்தசாமி இவங்க வீட்டுகாரர்,, ரெண்டுபேரும் தான் என்னை வளர்த்தாங்க,, இப்போ இவங்கதான் இந்த வீட்டை பார்த்துக்குறாங்க,, உனக்கு ரொம்ப பாதுகாப்பா இருப்பாங்க” என்றான்
அவன் முடித்ததுமே அன்னம்மா ரஞ்சனாவின் கைகளை பற்றிக்கொண்டு “ கண்ணு என் பேத்தி மாதிரி இருக்க,, இனிமேல் அப்பா அம்மாவை நெனைச்சுக்கிட்டு கண்ணை கசக்காத,, உனக்கு நாங்க இருக்கோம்” என்று ஆறுதல் சொன்னாள்

ரஞ்சனாவுக்கும் அந்த முதியவர்களை பிடித்துப்போனது,, கிருபாவை பார்த்து தன் பார்வையாலேயே நன்றி சொன்னாள்

கண்களை மூடித்திறந்து அவள் நன்றியை ஏற்றுக்கொண்ட கிருபா “ சரி அன்னம்மா நேரமாச்சு நான் கிளம்புறேன்,, ரஞ்சனாவை பத்திரமா பார்த்துக்கங்க,, அவங்ககிட்ட எதையும் கேட்டு வருத்தப்பட வைக்காதீங்க” என்று சொல்லிகொண்ட வாசலை நோக்கிப் போனவன் நின்று “ ரஞ்சனா உன் பெட்டி வண்டியில் இருக்கு, வா எடுத்து தர்றேன்” என்று அழைத்தான்

சரியென்று தலையசைத்து அவன் பின்னால் வந்தவளிடம் பெட்டியை எடுத்து கொடுத்துவிட்டு “ இனிமேல் தற்கொலை எண்ணமே உனக்கு வராதுன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு ரஞ்சனா” என்று அவள்முன் கையை நீட்டி நின்றான்
நீள நீளமான அவன் விரல்களை பார்த்தவாறு அமைதியாக நின்றாள் ரஞ்சனா

“ ம் சத்தியம் பண்ணு ரஞ்சனா” என்று கிருபா உரிமையுடன் அதட்ட,, சட்டென்று அவன் கையில் தனது கையை வைத்தாள் ரஞ்சனா

தேக்கைப் போன்ற உறுதியான அவன் கரத்தில், பூவைவிட மென்மையான ரஞ்சனாவின் கரம் பட்டதும், ரஞ்சனாவுக்கு சிலிர்த்தது,, உடனே பட்டென்று கையை விலக்கிக்கொண்டாள்

முகத்தில் திருப்த்தியுடன் “ ஓகே ரஞ்சனா நான் கிளம்புறேன்,, நாளைக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு பிரைவேட் டிடெக்டிவ் மூலம் குருமூர்த்தியை பத்தி விசாரிச்சு உன் தோழி சொன்ன தகவல்கள் உண்மையான்னு கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டை எடுத்து அதன் பின்னால் தனது புதிய மொபைல் நம்பரை எழுதி அவளிடம் நீட்டி “ இதுல என்னோட புது செல்போன் நம்பர்,, ஏதாவது அவசரம்னா இந்த மண்பாதையை கடந்து ஊருக்குள்ள போனா எஸ்டிடி பூத் இருக்கும் அங்கே இருந்து போன் பண்ணு,, என்னால முடிஞ்ச நேரங்களில் நான் வர்றேன்,, ஜாக்கிரதையா இரு ரஞ்சனா,, அன்னம்மாகிட்ட இதைபத்தி எதுவுமே சொல்லாதே,, யோசிச்சு ஒரு முடிவு பண்ணுவோம்” என்று கூறிவிட்டு காரில் ஏறி அமர்ந்து பார்வையால் அவளிடம் விடைபெற்று கிளம்பினான் கிருபா

கார் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சனா,, ஒரு செயலற்ற பெருமூச்சுடன் வீட்டுக்குள் போனாள்

நேரமாகிவிட்டதே என்ற பதட்டத்துடன் காரை விரட்டிய கிருபா வீட்டை அடையும்போது இரவு மணி பத்து ஆகிவிட்டது, அவசரமாக காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்குள் ஓடினான் கிருபா…

அவன் நினைத்தது சரியாகிவிட்டது,, வசந்தி தூங்காமல் ஒரு கையை கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ,, இன்னொரு கையால் மடியில் படுத்து உறங்கிய மகனை தட்டிக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்

வேகமாக போய் வச்தியின் மடியில் கிடந்த மகனை வாரியெடுத்து தன் தோளில் போட்டுக்கொண்ட கிருபா “ ஸாரிம்மா சீக்கிரமா வரனும்னு தான் நெனைச்சேன், ஆனா லேட்டாயிருச்சு” என்று வருத்தப்பட்டபடி மகனுடன் தங்கள் அறைக்கு போனான்

அவன் பின்னாலேயே வந்த வசந்தி “ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,, சத்யா தான் நீங்க வராம சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம் பண்ணான்,, எப்படியோ சமாதானம் பண்ணி சாப்பிட வச்சேன்” என்று கூறினாள்

அறைக்குள் போய் மகனை கட்டிலில் கிடத்திய கிருபா,, ஒரு போர்வையை எடுத்து சத்யன் மீது போர்த்தி விட்டு,, ஏசியை ஆன் செய்தான்

2 thoughts on “மனசுக்குள் நீ – பாகம் 25”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!