பொம்மலாட்டம் – பாகம் 28 – மான்சி தொடர் கதைகள்

மான்சியை அணைத்தபடி எழுந்து கொண்டவன் சோபாவிற்கு வந்து அமர முயன்றபோது அவனது கைப் பற்றி வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள் அவனது கைப்பிடித்து இழுத்தபடி பக்கத்திலிருந்த அறைக்குச் சென்றாள்….. அவர்களின் பின்னால் போக முயன்ற பவானியை ஆதி தடுத்து நிறுத்தி…

“சத்யன் பார்த்துப்பான் ஆன்ட்டி… பயம் வேண்டாம்” என்றான்…. அறைக்குள் நுழைந்த சத்யனுக்கு அது மான்சியின் அறை என்பதைத் தவிர வேறு ஒன்றும் புரியவில்லை…. கட்டிலுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்… பிறகு தான் அந்த அறையை நோட்டம் விட்டான்…. சுவரெங்கும் இவனது புகைப்படங்கள்… விதவிதமான போஸ்களில்…. குடும்பத்துடன்… நண்பர்களுடன்…. பள்ளியில்… கல்லூரியில்… அலுவலகத்தில்…. என எல்லா விதத்திலும் இவனது படங்கள் மட்டுமே…..



இவர்களின் திருமணத்திற்கு எடுத்தப் படங்கள்…. இவனது உறவினர்களுடன் நின்று எடுத்துக் கொண்டப் படங்கள் என அறையெங்கும் இவன் தான்… அதிர்ச்சியில் எழுந்தேவிட்டான்… இவனிடம் கூட இவ்வளவு படங்கள் இல்லை… எப்படி கிடைத்தது? சட்டென்று ஆதியின் ஞாபகம் வந்தது….. மொத்தப் படங்களையும் ஆதி தான் கலெக்ட் பண்ணிருக்கனும் என்று நினைக்கும் போதே ஆதி மிக உயர்ந்துத் தெரிந்தான்…..

சுவற்றில் மாட்டியிருந்த படங்களில் ஒன்றை எடுத்து வந்த மான்சி சத்யனின் அருகில் அமர்ந்து “இது வந்து……?” என்றவள் ஞாபகப்படுத்திக்கொள்ள புருவங்களை சுருக்கினாள்…. என்ன சொல்லப் போகிறாள் என்று கவனமானான் சத்யன்…. சத்யனின் முகத்தை சற்று உற்றுப்பார்த்தவள் “ம் ம் ஞாபகம் வந்திடுச்சு காலேஜ் படிக்கிறப்போ உங்க ப்ரண்ட்ஸ் கூட ஒக்கேனக்கல் போனப்ப எடுத்த படம்….

இது வந்து உங்க பிரண்ட் அசோக்… இவர் பிரவீன்… இவர் பாபு… இதுதான் ஆதி அண்ணா” என்று புகைப்படத்திலிருந்தவர்களை வரிசையாகச் சொல்லியவள் நிமிர்ந்து இவன் முகம் பார்த்து “சரியாச் சொன்னேனா?” என்று கேட்க… நீர் நிரம்பிய விழிகளோடு “ம் ம்….” என்றான். ஓடிச்சென்று வேறொரு புகைப்படத்தை எடுத்து வந்து “இவங்கதான் உங்க அப்பா அம்மா…. எனக்கு…… எனக்கு….” என்று குழம்பியவள்



கலவரமாக சத்யனைப் பார்த்து “ஞாபகம் இருக்கே…. சொல்லிடுவேனே” என்றாள்…. சத்யனுக்குள் புதியக் குழம்பம்… மான்சியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது…. “ஞாபகம் வரலைன்னா விட்டுடு கண்ணம்மா” என்றான்… “இல்ல இல்ல… எனக்குத் தெரியும்” என்றவள் கண்மூடி “சத்யன் அத்தானுக்கு ரொம்பப் பிடிச்ச முக்கியமானவங்க எனக்கு என்ன வேணும்?” என்று மறுபடி மறுபடி சொல்லிப்பார்த்து விட்டு சட்டென்று நினைவு வந்தவளாக

“ம் ம் அத்தை மாமா…. அத்தானோட அம்மா அப்பா எனக்கு அத்தை மாமா” என்றாள்….. மீண்டும் ஓடிச்சென்று மதி வாசுகியின் குடும்பப் படத்தை எடுத்து வந்து “இவங்க உங்க அக்கா மாமா குட்டிப் பாப்பா அம்மூ…. எனக்கு அண்ணா அண்ணியா வேணும்…” என்றாள்…. இப்படி சில படங்களை எடுத்து வந்து காட்டியவள் அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது….

உணவுப் பழக்க வழக்கம் என எல்லாவற்றையும் கூறி விட்டு “சத்யா அத்தானுக்கு நான் கூடவே சாப்பிட்டாத்தான் பிடிக்கும்…. அப்புறம் நீங்க எப்படி விரும்புறீங்களோ அப்படியிருக்கனும்” என்றாள்… சத்யன் புருவங்கள் முடிச்சிட “இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தா? இப்படி செய்தாதா தான் எனக்கு பிடிக்கும்னு சொன்னது யார்?” என்று கேட்க “உங்க பிரண்ட் டாக்டரும் இன்னொரு பிரண்ட் ஆதி அண்ணாவும் தான் இதையெல்லாம் நான் தெரிஞ்சுக்கனும்…. அப்போ தான் நீங்க என்னை உங்கக் கூடக் கூட்டிப் போவீங்கன்னு சொன்னாங்க” என்றாள்….



ஆத்திரமாய் வந்தது சத்யனுக்கு…. மான்சியை ஏற்றுக் கொள்வது எனது விருப்பம்னு சொல்லிட்டு எனக்காகவே இவளை தயார் செய்திருக்காங்க…. அதுவும் கர்ப்பிணினு கூட பார்க்காமல் கற்றுக் கொடுத்திருப்பது வேதனையாக இருந்தது….”எனக்கு உங்களைப் பத்தி எல்லாம் தெரியும்… நீங்க சொன்னா கேட்டுக்குவேன்…. என்னை உங்கக் கூடக் கூட்டிட்டுப் போறீங்களா?” என்று இவனது கைப்பற்றிக் கேட்வளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்….

“இதெல்லாம் தெரியலைனாலும் இனி உன்னை தனியா விடமாட்டேன் மான்சி” என்று கலங்கினான்….. அணைத்தவனை இவளும் அணைத்து அவனது பிடரியை வருடி கன்னத்தில் முத்தமிட… சிலிர்த்துப் போனான் சத்யன்…. ‘கிஸ் பண்றாளே?’ என்று இவன் யோசிக்கும் போதே இவனது முகத்தைத் திருப்பி உதடுகளில் முத்தமிட்டாள் மான்சி…. வியந்து போய் நிமிர்ந்தான்…..

‘இது எப்படி சாத்தியம்?’ “சத்யா அத்தானோட பிரண்ட் டாக்டர் தான் நிறைய சினிமாப் படம் போட்டுக்காட்டி அத்தானுக்கு இப்படி இருந்தா பிடிக்கும்னு சொன்னார்” என்று மான்சியே சொல்லிவிட அதற்குமேல் கேட்க முடியாமல் மான்சியை அணைத்துக் கொண்டு துடித்துவிட்டான்…… டாக்டர் செபாஸ்டியனுக்கு இவை எத்தனை சவாலாக இருந்திருக்கும் என்று புரிந்தது…. மான்சிக்குப் பிடித்த விஷயம் நானென்றதும் என்னை வைத்தே அனைத்தையும் அவளுக்குள் புகுத்தி…..



கடுமையான போராட்டம் தான்….. மனைவியை அணைத்தபடி எழுந்து வெளியே வந்தான்…. ஆதி சோபாவில் அமர்ந்திருக்க அவனெதிரே போய் நின்றான்….. “ஏன்டா இப்படி? எனக்காவே இவளைத் தயார் செய்திருக்கீங்க போலருக்கு?” என்று சற்றே வருத்தமாகக் கேட்டான் சத்யன்…. வேகமாக நிமிர்ந்த ஆதி “முட்டாள் மாதிரி பேசாத சத்யா…. எங்களுக்கு வேற வழி தெரியலை….

சத்யா அத்தானோட பிரண்ட் ஆதி அப்படின்னு என்னை அறிமுகம் பண்ணிக்கிட்டா தான் என்னையே வீட்டுக்குள்ள அனுமதிக்கிறா…. நீ நாலு இட்லி சாப்பிட்டாத்தான் அத்தானுக்குப் பிடிக்கும்னு சொன்னாதான் நாலு இட்லி சாப்பிடுறா….

உன் போட்டோ கூட டாக்டர் செபாஸ்ட்டியன் போட்டோவை இணைச்சு எடுத்துட்டு வந்து காட்டியப் பிறகு தான் டாக்டரையே ட்ரீட்மெண்டுக்கு அனுமதிச்சா…. இப்படி மொத்த விஷயத்தையுமே உன்னை வச்சுதான் அவளுக்குள்ள புகுத்த முடியுது சத்யா…. நிச்சயமா உனக்காக அவளை நாங்க தயார் செய்யலை தெரியுமா? வேற ஆப்ஷனே எங்களுக்கு இல்லாம போச்சு… அதுதான் நிஜம்” என்று கோபமாகப் பதில் கொடுத்தான்….நண்பன் கூறுவது விளங்கிற்று….



இதுவும் கூட பெரும் அதிசயமாகத் தெரிந்தது…. ‘என்னை வைத்துத் தான் இவளது உலகமே சுழல்கிறதா?’ மான்சியின் கைகளைப் பற்றிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தவனின் தோளில் கை வைத்த ஆதி…. “உன்னால மான்சியோட நிலைமையை புரிஞ்சுக்க முடியுதா சத்யா?” என்று கேட்டான்….

திரும்பி நண்பனைப் பார்த்த சத்யன் “இதுக்கு மேலயும் புரிஞ்சுக்க முடியலைன்னா நான் மனுஷனே கிடையாது ஆதி…. சாதரணமா இருக்குற ஒரு பொண்ணு புருஷனை உயிரா விரும்பினாள் அப்படின்னா அது வெறும் செய்தி…. என் மான்சி மாதிரி ஒரு பெண் புருஷனை மட்டுமே நேசிக்கிறாள் அப்படின்னா இது சகாப்தம் ஆதி…. மான்சி எனக்குக் கிடைச்ச வரம்னு தான் சொல்லனும்…” என்றதும் பவானி தடுமாறி தத்தளித்து கையெடுத்துக் கும்பிட்டாள்…..

“இல்ல அத்தை… நான் தான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்கனும்…. அன்னைக்கு எனக்கு வேற வழித்தெரியலை…. குழந்தை போல இருக்குற ஒருத்திக்கூட ஒரு வாரம் வாழ்ந்திருக்கேன்ற குற்றவுணர்வில் அதுபோல நடந்துக்கிட்டேன்….. இப்போதான் புரியுது…. மான்சிக்கு கணவனா இருக்க முடியலைனாலும் ஒரு தாயாக உங்க இடத்துல நான் இருந்திருக்கனும்… இப்போ அது தானாகவே நிகழ்ந்துருச்சு…. நீங்க இருந்த இடத்துக்கும் மேலே அவளாகவே என்னைக் கொண்டு போய்ட்டா….. ரொம்ப ரொம்ப மேல கொண்டுப் போய்ட்டா…….”

என்றவன் மேல பேசமுடியாமல் மான்சியை அணைத்து அவளது தோளில் தலைசாய்த்து அழுதுவிட்டான்…. கணவன் எதற்காக அழுகிறான் என்று புரியாமலேயே அவனை ஆறுதலாக அணைத்தாள்…. பவானி ஒரு தாயின் வாஞ்சையோடு மருமகனின் தலையில் கை வைத்து “என் மகளைப் பார்க்க என்னாலேயே நம்பமுடியலை….



எல்லாம் சரியாகிடும்னு நம்பிக்கையிருக்கு தம்பி….. முதன் முதலா உங்களைப் பார்த்தப்ப மான்சியை நீங்கதான் பத்திரமாப் பார்த்துக்குவீங்கன்னு தோனுச்சு… ஏதோ கெட்டநேரம் இடையில இப்படியாகிடுச்சு… இனி எல்லாம் நல்லதே நடக்கும் தம்பி” என்றாள்…. “ம் ம் இனி நல்லதே தான் நடக்கும்” என்ற சத்யன் “ஆனா அத்தை மான்சியை இப்போ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது… அக்காவுக்கு இதுதான் மாசம்…. பிரசவ நேரத்தில் டென்ஷன் வேணாம்னு நினைக்கிறேன்…..

அவங்களும் உங்களை மாதிரிதான்… உங்களுக்கு எப்படி மான்சியோட வாழ்க்கை மட்டும் தான் கண்ணுக்குத் தெரியுதோ அப்படித்தான் என் அக்காவுக்கு நான் மட்டும் தான் தெரிவேன்…. எனது நலன் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்…. இப்போ போய் மான்சியைப் பத்தி சொல்லிப் புரிய வைக்க முடியாது…. அக்காவுக்குக் குழந்தைப் பிறக்கிற வரைக்கும் மான்சி இங்கயே இருக்கட்டும்…. நான் தினமும் வந்துப் பார்த்துக்கிறேன்” என்றான் சத்யன்….


Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!