மனசுக்குள் நீ – பாகம் 53

மான்சியின் மாமா வேகமாக வந்து கிருபாவின் கையைப்பிடித்து “ சம்மந்தி என்னை மன்னிச்சுடுங்க, ஊர்ல இருக்குற நாலு தறுதலைங்க பேச்ச கேட்டு நானும் ரொம்ப ஆடிட்டேன், கூடப்பிறந்த தங்கச்சி மகளை சொத்துக்காக என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன்,

ஆனா நீங்க எங்கருந்தோ வந்து என் தங்கச்சியோட சொத்து வேனாம் பொண்ணு மட்டும் போதும்னு சொல்றீங்க, உங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை எனக்கு இல்லாம போச்சே சம்மந்தி, அந்த காலத்துல போருக்கு போகும் வீரன் கூட தன் மனைவி பிள்ளைகளை பொண்டாட்டியோட சகோதரன் கிட்டதான் ஒப்படைச்சுட்டு போவாங்களாம், அந்தளவுக்கு தகப்பனுக்கு பிறகு தாய்மாமன் உறவுதான் ஒரு பொண்ணுக்கு முக்கியமான உறவா இருந்தது,



இதெல்லாம் புரியாம நான் தப்பு பண்ணிட்டேன் சம்மந்தி என்னை மன்னிச்சிடுங்க, என் தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் பண்ணேனோ அதைவிட அமர்க்களமா அவ மகளுக்கு பண்ணப்போறேன், நீங்க சீக்கிரமே தேதி வச்சுட்டு சொல்லியனுப்புங்க சம்மந்தி நான் சீர் வரிசையோட வர்றேன்,, என்ன என் மகன் கொஞ்சம் தகராறு பண்ணுவான்,, அவனை நான் சமாளிச்சுக்கறேன்” என்று உருக்கமாக நீளமாக பேசினார்

கிருபாவுக்கு ஆச்சரியமாக இருந்தது, எவ்வளவு பெரிய பிரச்சனை ஒரே இரவில் தீர்ந்துபோனதை நினைத்து சந்தோஷமாக இருந்தது, தேவையில்லாத ஒரு பிரச்சனையை சம்மந்தமேயில்லாமல் இத்தனை இழுத்துவிட்டு இப்போது ஒரே இரவில் முடிப்பதென்றால் அது கிராமத்தில் தான் முடியும், இவர்களின் மனம் எவ்வளவு முரட்டுத்தனமாக இருந்தாலும் சட்டென்று இளகிவிடகூடியது போலருக்கு என்று நினைத்துக்கொண்டார்

கார்த்திக் மூலமாக சத்யனுக்கு எல்லாம் தெரியப்படுத்தப்பட்டது, சத்யனும் அங்கேயே தாம்பூலம் மாற்றி திருமணத்திற்கு நாள் குறிக்கும்படி கூறிவிட அடுத்து வரும் ஞாயிறன்று சுவாமிமலையில் திருமணம் செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது,

திருமண நிச்சயம் முடிந்த, கிருபா வீட்டினர் எல்லோரும் கோவை கிளம்பினார்கள், இனி மான்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்றதும் எல்லோரும் நிம்மதியாக கிளம்பினார்கள்



ஆனால் இன்னும் ஒரு வாரத்துக்கு சத்யனை பார்க்கமுடியாதே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது, ரொம்பவே சோகமாக இருந்தாள் மான்சி, அனிதாவும் கார்த்திக்கும் கிளம்பும் கடைசி நிமிடம் வரை அவளை சமாதானம் செய்தனர்

அவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடமே சத்யனிடம் இருந்து மான்சி போன் வந்தது, மான்சி மனதுக்குள் பூத்த காதல் மலர்கள் வாசம் வீச மொபலை ஆன்செய்து காதில் வைத்து “ சொல்லுங்க” என்றாள்

ஆனால் எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை, சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு வெறும் முத்தமிடும் சத்தம் மட்டும் அவள் காதினை நிறைத்தது, சத்யன் எவ்வளவு ஏங்கிப்போயிருக்கிறான் என்பதை அவன் முத்தங்களின் எண்ணிக்கை சொன்னது

மான்சிக்கு விழிகள் குளமானது அவனுடைய மனதை புரிந்துகொள்ள முடிந்தது, அவள் தொண்டை அடைக்க “ என்னாச்சுபா இன்னும் ஒரு வாரம் தானே, அப்புறம் உங்களைவிட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டேன், இங்கே எனக்கு அழுகையா வருதுங்க” என்று கூறிவிட்டு மான்சி விசும்பினாள்,

“ அழாதடா கண்மணி என்ன செய்றது நம்ம அவசரம் பெரியவங்களுக்கு புரியலையே,, பேசாம நான் வேனும்னா கிளம்பி அங்க வந்துரவா, கல்யாணம் வரைக்கும் அங்கேயே இருக்குறேன்” என்று கேட்டான் சத்யன்

“ ம்ஹூம் அதெல்லாம் வேனாம் இங்க இருக்கிறவங்க தப்பா நெனைப்பாங்க,, தினமும் அடிக்கடி போன் பண்ணுங்க அது போதும்” என்றாள் மான்சி



அதன்பிறகு திருமணநாள் வரை இருவரும் பேசியதில் செல்போன் பேட்டரிகள் நான்கைந்து உருகிவிட்டது, காதலை பேசிப்பேசி கைபேசி சூடானது, எவ்வளவு நேரம் பேசினாலும் இணைப்பை துண்டித்ததும் என்ன பேசினோம் என்று இருவருக்குமே ஞாபகம் இருக்காது, பரிமாறிக்கொண்ட முத்தங்களின் எண்ணிக்கையையும் கூட மறந்துவிட்டு இருவரும் எத்தனை வெட்டவெளியில் காற்றி விரலால் எண்களை வரைந்து எண்ணிப்பார்த்தனர்,

” அன்பே உன்னைப்பற்றி ஒரு காதல் கவிதை எழுதினேன்”

” அது வெறும் காகிதம் தானே?’

” என் உணர்வுகளை எப்படி உனக்கு சொல்லும்”

” உயிருள்ள கவிதையாக நான் இருக்கும் போது”

” காகித கவிதை உனக்கெதற்கு! 

 

சத்யன் மான்சி இருவருக்கும்,, குறிப்பிட்ட சிலர் முன்னிலையில், சுவாமிமலை திருக்கோயிலில், நாத்தனார் முறையில் அனிதா அம்மன் விளக்கை ஏந்த, சத்யன் மான்சியின் கழுத்தில் தாலி கட்டினான், எந்தவித பிரச்சனையும் இன்றி திருமணம் அமைதியாக அழகாக நடந்தது, கிருபாவும் ரஞ்சனாவும் எல்லாவற்றையும் முன்னின்று செய்தாலும் சத்யன் அவர்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

மான்சி சத்யனை கவனித்ததை விட அவனுடைய செயல்களை அதிகமாக கவனித்தாள்,, சத்யன், திரும்பிப் பார்க்காதது போல் நடித்தாலும், அவன் பார்வை அடிக்கடி கிருபா மீதும் ரஞ்சனா மீதும் படிந்து மீண்டது, குறிப்பாக ரஞ்சனாவின் மீது சற்று அதிகமாகவே படிந்து மீண்டதை கவனித்தாள், ரஞ்சனா மனம் சங்கடப்படும் படி ஏதாவது பேசிவிடுவானோ என்று ரொம்பவே பயந்தாள் மான்சி, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை,

ஐயரின் சொல்படி திருமண சம்பிரதாயங்களை சரியாக செய்தாலும் அவன் சற்று இறுக்கத்துடனேயே இருப்பது போல் இருந்தான்,, மான்சியின் குடும்பத்தாரின் முன்பு எதுவும் பேசக்கூடாது என்று அமைதிகாக்கிறானோ என்று மான்சி நினைத்தாள், தாலிகட்டி முடித்து அவள் கையைப்பிடித்து அக்னியை வலம்வரும் போதுகூட அவன் முகத்தில் சிரிப்பு இல்லை அவள் கையை எதற்காகவோ பயந்து பற்றியிருப்பவன் போல அழுத்தமாகப் பற்றியிருந்தான்

மறுபடியும் மணவறையில் அமர்ந்தனர், மான்சிக்கு அவன் என்ன மனநிலையில் இருக்கிறானோ என்று புரியவில்லை,, குனிந்து மாலையை சரிசெய்யும் சாக்கில் “ என்னாச்சுங்க, ரிலாக்ஸா இருங்க ப்ளீஸ்” என்றாள் மெல்லிய குரலில்,



உடனே அவளை திரும்பி பார்த்த சத்யன், அவள் முகத்தில் இருந்த கவலையை பார்த்து “ ஒன்னுமில்லடா,, அம்மாவோட ஞாபகம் வந்துருச்சு அவ்வளவுதான், நீ கவலைப்படாதே” என்று சிறு புன்னகையுடன் கூறினான்

அம்மாவோட ஞாபகம் என்று அவன் சொன்னதும் அவனை அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் அலைபோல் எழுந்தது, ஆனால் சுற்றியிருந்தவர்களை மனதில் கொண்டு அமைதியானாள், மாலையின் மறைவில் அவனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினாள், அவள் கொடுத்த அழுத்தமான ஸ்பரிசம் அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் போல, அதன்பிறகு கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பதுபோல் மான்சிக்கு தோன்றியது,

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சாமி தரிசனம் செய்த பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும்படி ஐயர் சொல்ல, சத்யன் தன் மனைவியுடன் பாட்டியின் காலில் விழுந்து எழுந்தான், அமிர்தம்மாள் கண்கலங்க இருவரையும் ஆசிர்வதித்தார்,

“ அடுத்து மாப்பிள்ளையோட அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ” என்றார் ஐயர்

அவர் சொல்லி முடித்ததும் சத்யன் உடல் சட்டென்று விரைத்து நிமிர்ந்தது, பற்றியிருந்த மான்சியின் கைவிரல்களை நெறித்தான், மான்சிக்கு வலித்தது ஆனாலும் அமைதிகாத்து அவன் பக்கம் திரும்பி “ சத்யன் எனக்காக ப்ளீஸ், எங்க மாமா நம்மளையே பார்த்துக்கிட்டு இருக்காருங்க, ப்ளீஸ் எல்லார் முன்னாடியும் உங்கப்பாவை தலைகுனிய வச்சிடாதீங்க, வாங்க ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” அவன் விரல்களை பற்றி இழுத்தாள்

சத்யன் அப்போதுதான் மான்சியின் தாய்மாமனை பார்த்தான், அவர்,, தயங்கி நின்ற இவர்களையே குழப்பமான முகத்துடன் கவனித்துக்கொண்டு இருந்தார்,,

“ ம் வாங்க அவர் நம்மளையே பார்க்கிறார்” என்று ரகசியமாக சொல்லி மான்சி அவன் கையைப்பிடித்து இழுக்க, சத்யன் அரை மனதோடு அவளுடன் போனான்



கிருபாவும் ரஞ்சனாவும் இணைந்து நிற்க்க சத்யனும் மான்சியும் அவர்களின் கால்களில் விழுந்தனர், ஐயர் கொடுத்த அட்சதையை மணமக்கள் மீது தூவி அவர்களை மனதார வாழ்த்தினார்கள் கிருபாவும் ரஞ்சனாவும்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!