மனசுக்குள் நீ – பாகம் 12 – மான்சி தொடர் கதைகள்

அதற்குள் சத்யனின் அறை வந்துவிட்டது, அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தபடி “அப்படின்னா நீ ஆர்னிதாலஜி இல்ல படிச்சிருக்கனும் ஏன் பேஷன் டிசைனிங் படிச்ச மான்சி” என்று சத்யன் கேட்க

“எனக்கு இதுவும் ரொம்ப புடிக்கும்,, அதான் படிச்சேன் என்று பதிலலித்தாள் மான்சி

அறைக்குள் பியூன் டேபிளில் இருந்த வற்றை துடைத்து சீராக அடுக்கிக்கொண்டு இருந்தான்,, சத்யனையும் மான்சியையும் பார்த்து புன்னகையோடு குட்மார்னிங் சொன்னான்

தனது இருக்கையில் வந்து அமர்ந்த சத்யன் “ என்ன குமார் எல்லாம் முடிஞ்சுதா” என்றான்

“ ம் எல்லாம் தொடச்சு அடுக்கிட்டேன் சார்,, நான் போகவா” என்று கேட்டான் பியூன்



“ சரி நீ போய் ரெண்டு கப் காபி கொண்டு வந்து குடுத்துட்டு போ” என்ற சத்யன் மான்சியை பார்த்து “ உட்கார் மான்சி” என்று எதிர் இருக்கையை காட்டினான்

“ தாங்க்யூ சார்” என்று அமர்ந்தாள் மான்சி,, பியூன் வெளியேற,,

“ எனக்கு கூட சாப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் போகனும்னு தான் சின்ன வயசுல ஆசை,, ஆனால் அம்மாவோட இந்த மில்லை நிர்வாகம் பண்ணனும் என்ற ஒரே காரணத்தால் தான் டெக்ஸ்டைல்ஸ் இஞ்ஜினியரிங் படிச்சுட்டு,, மேல் படிப்பு எம்பிஏ யூஎஸ்ல முடிச்சேன்,, வந்ததுமே இந்த மில்லின் இந்த சீட்ல உட்கார்ந்து இப்போ அஞ்சு வருஷம் ஆயிருச்சு” என்று தன்னைப்பற்றிய விபரங்களை அவளுக்கு சொன்னான்

இது எல்லாமேதான் மான்சிக்கு, அனிதாவின் உபயத்தில் தெரியுமே,, இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் லேசாக விழிவிரித்து “ ஓ அப்படியா’ என்றாள்

“ ம்ம்,, அதுக்கப்புறம் இந்த மில்லை சீராக்கவே என் நேரம் போயிருச்சு,, எனது சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் மில்லின் வளர்ச்சியில் தான் காட்டுவேன்,, என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி ஒருநாள்கூட யோசிக்கலை மான்சி,, ஆனா நேத்து காலையிலிருந்து என்னுடைய பிற்க்காலம் பற்றிய சிந்தனைகள் இடைவிடாமல் வருது,, வருங்காலத்தில் ஒரு குடும்பத்தின் தலைவனாக நான் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைகள் வருது மான்சி” என்று தனது மனநிலையை அவள் கண்களைப் பார்த்தபடியே சத்யன் சொல்ல



“ அதான் இப்பகூட ஒரு குடும்ப தலைவராகத்தானே இருக்கீங்க” என்று மான்சி சத்யனுக்கு அவனது அப்பாவின் குடும்பத்தில் இருக்கும் மரியாதையை மனதில் வைத்து அதை சொல்லிவிட்டு அய்யோ என்று தனது நாக்கை கடித்துக்கொண்டாள்

சத்யன் நெற்றியை சுழித்து புருவத்தை சுருக்கி “ நீ என்ன சொல்ற” என்று கேட்க
சட்டென்று சுதாரித்த மான்சி “ அதான் இந்த மில்லும் ஒரு குடும்பம் மாதிரிதானே அதை வச்சு சொன்னேன்” என்று சமாளித்தாள்

“ ஓ அதுவா” என்று இலகுவான சத்யன் “ ஆமாம் நீ சொல்றதும் சரிதான்,, இந்த மில் ஒரு குடும்பம்னா நான் குடும்பத்தலைவன் தான்” என்று கூறிவிட்டு சிரித்த சத்யன் “ ஆமா நீ ஏன் மான்சி அனிதா கூடவே தங்கமா , அவ ப்ரண்ட் வீட்டுல தங்கின,, அனிதா வீட்டுல கெஸ்ட்ஹவுஸ் கூட இருக்கே என்று சத்யன் கேட்க

சிறிதுநேரம் என்ன பதில் சொல்வது என்று தயங்கிய மான்சி அவனிடம் பொய் சொல்ல மனம் வராமல் தயக்கத்தை உதறிவிட்டு “ அனிதா முதலில் அவக்கூட தான் தங்க சொன்னா,, ஆனா அனிதா வீட்டுல தங்கினா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் அதனால்தான் வேற எங்கயாவது ரூம் பார்க்க சொன்னேன்,, வேற லேடிஸ் ஹாஸ்டல் எதிலேயும் இடம் இல்லாததால், தற்சமயம் இந்த வீட்டுல தங்கச்சொன்னா,, அதான்…..” என்று மான்சி கூறிவிட்டு தலையை குனிந்து கொண்டாள்



சத்யனுக்கு உள்ளுக்குள் யாரோ வீணையை மீட்டி இன்னிசை நாதம் இசைத்தார்கள்,, அதை முகத்தில் காட்டாமல் “ அப்போ நீ சொல்றத பார்த்தா,, எனக்கு எதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டுவிட்டுஅவளின் குனிந்த தலையை கூர்ந்து பார்த்தான் ,,

தெரியும் என்பதுபோல் அவள் தலை தயக்கமின்றி உடனே அசைந்தது

“ என்னைப்பற்றி வேறென்ன தெரியும் மான்சி” என்று மறுபடியும் கேள்வியை தொடுத்தான்

இப்போதும் தலை நிமிராமல் “ எல்லாமே தெரியும்” என்றாள் மான்சி
சத்யன் அடுத்து எதுவுமே கேட்கவில்லை,, ஓடிச்சென்று அவளை அள்ளி அணைக்க பரபரத்த கைகளை அடக்க சிரமப்பட்டான்,, அவள் முகத்தை பார்க்க ஆவலாய் இருந்தது

“ உனக்க எப்படி தெரியும்,, என்று கேட்டுவிட்டு “ப்ளீஸ் நிமிர்ந்து பார்த்து பேசு மான்சி” என்றான்

நிமிர்ந்த மான்சி அவன் முகத்தை சிலவினாடிகள் பார்த்தாள்,, அவன் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு அவளை வெட்கப்பட வைத்தாலும் மீண்டும் தலைகுனியாமல் பார்வையை வேறுபுறம் திருப்பி “ காலேஜ் ஹாஸ்டலில் இருந்தப்ப அனிதா அடிக்கடி உங்களைப்பத்தி தான் நிறைய பேசுவா,, அது என் மனசுல பதிஞ்சு போச்சு,, உங்களோட விருப்பு வெறுப்புகள் எல்லாமே எனக்கு தெரியும்,, முதன்முதலா உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு பிடிக்காத ஒன்றை செய்ய எனக்கு தைரியம் இல்லை” என்றாள் மெல்லிய குரலில்

அவளின் வார்த்தைகள் மனதை மயிலிறகால் வருடியது “ அப்போ எனக்கு பிடிக்காத எல்லாமே உனக்கும் பிடிக்காதா மான்சி” என்று ஆர்வமாக கேட்டான்



சட்டென்று நிமிர்ந்த மான்சி “ நான் அப்படி சொல்லலை,, உங்களுக்கு பிடிக்காததை செய்து முதல்லயே வெறுப்பை சம்பாதிக்க விருப்பமில்லை அவ்வளவுதான் ,, மத்தபடி உங்களோட நடவடிக்கைகள் சிலது எனக்கு சுத்தமா பிடிக்காது” என பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

திகைப்பை முகத்தில் காட்டாது மறைத்த சத்யன் “ எந்த நடவடிக்கைகள் பிடிக்கலை” என்றான்

அவன் முகத்தை நேராக பார்த்த மான்சி “ ம் எப்பவோ நடந்த ஒரு விஷயத்துக்காக,, இப்பவும் மனசுல வஞ்சம் வச்சுகிட்டு பெற்ற தகப்பனை போய் பார்க்காம இருக்கீங்களே அது பிடிக்கலை,, உங்களோட இழப்பு பெரிசுன்னாலும் அதுக்காக எதிர் தரப்பில் என்ன நடந்ததுன்னு கூட விசாரிக்காம இத்தனை வருஷமா அவங்களுக்கு தண்டனை குடுக்குறீங்களே அது பிடிக்கலை,, தங்கைகள் மேல் உண்மையான பாசம் வச்சிருந்தும் அதை வெளியே காட்டாமல் அவங்களை அவாய்ட் பண்றது எனக்கு பிடிக்கலை” என்று மான்சி படபடவென்று அவனது குறைகளை சுட்டிக்காட்டி பேசினாள்



இதே வேறு ஒருவராக இருந்தால் சத்யனின் பார்வையால் பொசுங்கி போயிருப்பார்கள்,, ஆனால் மான்சி அஞ்சாமல் அவனை நேருக்குநேர் பார்த்தாள்
முகம் இறுக “ பதினாறு வருஷமா நான் பட்ட அவமானங்கள் தெரியுமா? என்னோட வலிகள் உனக்கு தெரியுமா? தெரிஞ்சா இப்படி பேசமாட்ட மான்சி “ என்று சத்யன் கோபத்தின் உச்சியில் இருந்தாலும் குரலை அடக்கி பேசினான்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!