பொம்மலாட்டம் – பாகம் 02 – மான்சி கதைகள்

edited_1480560333238கோட் சூட்டுடன் கம்பீரமாக கண்ணாடியின் முன் நின்றிருந்தான் சத்யன் …. அவனது நண்பர்கள் சிலர் ஏதோ பேசி அரட்டையடித்துக் கொண்டிருக்க … கட்டிலில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அம்ருதா ….

” நான் எப்பவோ ரெடி அக்கா …. என்னோட லவ்வர் தான் ரெடியாகாம முரண்டு பண்ணிக்கிட்டு இருக்கா …. நீயே என்னன்னு கேளுக்கா ” என்று சத்யன் கூறவும் … மகளிடம் வந்த வாசுகி ” உனக்கு என்ன அம்மு ஆச்சு ?” என்று கேட்க ….. நிமிர்ந்துப் பார்த்து முறைத்த அம்ருதா



” இந்த மாமா என்னை தான கல்யாணம் செய்துக்கப் போறேன்னு சொல்லிச்சு …. இப்பப்பார்த்தா அதோ அந்த அக்காவை கல்யாணம் செய்துக்ப் போகுது …மாமா சீட் பண்ணிடுச்சு … நான் யார் கூடவும் பேச மாட்டேன் போ ” என்று கட்டிலில் கவிழ்ந்து கேவினாள் .. அம்ருதா கைகாட்டிய திசையில் இருந்த போட்டோவில் சத்யனும் அவனுடன் அழகுக்கெல்லாம் ஆதியாக … அமைதியான புன்னகையுடன் ஒரு பெண்ணும் இருந்தனர் …

பத்திரிக்கையில் போடுவதற்காக இருவரும் இணைந்து நின்று எடுத்துக் கொண்ட படம் … வாசுகிதான் அதை பெரியதாக்கி லேமினேஷன் செய்து சத்யனின் படுக்கையறையில் மாட்டியிருந்தாள் …. அழும் மகளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் ” எல்லாம் உன்னால வந்தது தான்டா… நீயே சமாளி… எனக்கு வேலை கிடக்கு ” என்று அறை வாசலை நெருங்கியவள் ” இன்னும் அரை மணிநேரத்துல நாம மண்டபத்துல இருக்கனும் சீக்கிரமா கீழ வா ” என்று கூறிவிட்டுச் சென்றாள் …



கட்டிலில் கிடந்த அம்முவைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொஞ்சிய சத்யன் ” என் செல்லம் தான் எப்பவுமே என்னோட லவ்வர் … அந்தப் பொண்ணு சும்மா …. ” என்றதும் … நிமிர்ந்துப் பார்த்து அவனது தாடையைப் பற்றித் தன்பக்கமாகத் திருப்பிய அம்ருதா ” ப்ராமிஸ் ?” என்று கைநீட்ட … ” ப்ராமிஸ்டி அம்மு ” என்றவன் அவளின் குண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு .. ” இப்போ போய் சீக்கிரமா டிரஸ் பண்ணிக்கிட்டு வாங்க தங்கம்… நாம கார்ல போகலாம் ” என்றதும்

” ஓகே…. ” என்று அவனுக்கு பதில் முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடினாள் …. சத்யனின் நண்பன் ஆதித்யா மாலையை எடுத்து வந்து சத்யனின் கழுத்தில் போட்டதும் மற்ற நண்பர்கள் எல்லோரும் கைத்தட்டி … ” டேய் மாப்ள… பொண்ணுக்கு முன்னாடி இவன் தான்டா உனக்கு மாலைப் போட்டிருக்கான் … நாளைக்கு பர்ஸ்ட்நைட் இவன் கூடவா? இல்ல கல்யாணப் பொண்ணு கூடவா ?” என்று கேலி செய்ய …. சத்யன் தலையில் தட்டிக் கொண்டு ” போய்த் தொலைங்கடா … அசிங்கம் புடிச்சவனுங்களா ” என்றான்…

சிரிப்பும் கேலியுமாக இருந்த நண்பர்களை கீழே அனுப்பி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கட்டிலில் அமர்ந்தான் சத்யன் …. சென்ற மாதம் வரை யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுடன் நாளை காலை திருமணம் … புன்னகை விரிய மோடாவிலிருந்த கல்யாண பத்திரிக்கையை எடுத்தான் ….



உயர்தர அட்டையில் அழகான பிரிண்டில் செதுக்கப் பட்டிருந்த தங்கநிற எழுத்துக்கள் ….மணமகனாக இவனதுப் பெயருக்கு பக்கத்தில் மணமகளாக ” மான்சி BCA ” என்று எழுதப்பட்டிருந்தது …. சத்யனின் விரல்கள் அந்த பெயரை வருடியது …. காதலிக்க நேரமின்றி கடமையே கண்ணாக இருந்தவனை இந்த ஒரு மாதமாக கனவிலும் நினைவிலும் தவறாமல் தொல்லை செய்பவள் மான்சி …

இவளது பெயர் எத்தனை அழகோ அதைவிட பலமடங்கு அழகு அவளது வதனம் …. யார் மூலமாகவோ முகவரித் தெரிந்து வாசுகி மட்டும் சென்று முதலில் பெண் பார்த்து விட்டு வந்து அவளது அழகிலும் அமைதியிலும் மயங்கி தனது தம்பிக்கு ஏற்றவள் இவள் தான் என்ற முடிவோடு மறுநாளே தனது குடும்பத்தோடு சென்று பேசி முடித்துவிட்டாள் ….

அன்று பார்த்த அவள் உருவம் நெஞ்சில் ஆழப் பதிந்து விட…. இன்று வரை அவள் நினைப்பிலேயே பொழுது விடிந்தது …. இந்த ஒரு மாதத்தில் பல முறை அவளிடம் பேச முயன்று ஓரிரு முறை சில வார்த்தைகள் மட்டுமே பேச முடிந்தது … அதுவும் சம்பிரதாயமான வார்த்தைகள் தான் …. சத்யன் தனது மனதில் பூத்திருக்கும் காதலைச் சொல்ல வழியில்லாது போய்விட …அவளுடன் கிடைக்கப் போகும் தனிமைக்காகக் காத்திருந்தான் ….



பத்திரிக்கையின் அட்டையில் இருந்த மான்சியின் படத்தின் மீது தனது உதடுகளை ஒற்றியெடுத்தான் …. இதுவரை கொடுத்த முத்தங்களை எண்ணவில்லை …. இனி கொடுக்கப் போவது இந்த அட்டைக்கு இல்லை … அந்த அழகிக்கே நேரடியாகக் கொடுப்பேன் ‘ என்ற எண்ணத்தில் உடல் சிலிர்த்தான் ….

அப்போது கீழேயிருந்து வாசுகி அழைக்கும் குரல் கேட்டு ” இதோ வந்துட்டேன்க்கா ” என்றுவிட்டு தனது அறையிலிருந்து வெளியே வந்தான் … கழுத்தில் மாலையுடன் வந்த தம்பியைப் பார்த்து கண் கலங்கிய வாசுகி ” பூஜை ரூம் போய் அப்பா அம்மாவைக் கும்பிட்டுக்கோ சத்யா ” என்றாள் .. சரியென்று தலையசைத்தவன் பூஜையறைக்குச் சென்று தெய்வங்களாகிவிட்ட தனது பெற்றோரை வணங்கிவிட்டு வந்தவன் தனது அக்காவின் காலிலும் விழுந்தான் …



” வேணாம் அப்பு ” என்று கண்கலங்க தனதுத் தம்பியைத் தூக்கி தோளில் சாய்த்தவள் ….. ” என்னோட கடமையை சரியாச் செய்தேனான்னுத் தெரியலை …. அப்பா அம்மா அளவுக்கு என்னால முடியாது அப்பு ” என்றாள் …. தமக்கையின் வாயை தனது விரல்களால் பொத்தியவன் ” அப்பா அம்மாவை விட நீ பலமடங்க உயர்வா பார்த்துக்கிட்டக்கா …. இன்னொரு முறை இப்புடி பேசாதேக்கா ” என்றவன் கண்களும் கலங்கியது …..

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!