மனசுக்குள் நீ – பாகம் 54

கிருபா கட்டுபாட்டில் இருந்தாலும், ரஞ்சனா தனது மகனும் மருமகளும் காலில் விழுந்ததும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு கண்ணில் நீர்மல்க மான்சியை தூக்கி அணைத்துக்கொண்டு குலுங்கினாள், 

சத்யன் எழுந்து நின்று இருவரையும் பார்த்தான், அவனுக்கு ரஞ்சனாவின் கண்ணீரைப் பார்த்து சங்கடமாக இருந்தது, அவளின் குமுறலும் கண்ணில் வழிந்த கண்ணீரும் நடிப்பு கிடையாது என்று புரிந்தது, மனதுக்குள் ஏதோ புரண்டது, சத்யன் சட்டென்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,



கிருபா தன் மனைவியின் தோளில் தட்டி ஆறுதல் சொல்ல, ரஞ்சனா சூழ்நிலையை உணர்ந்து நிதானித்தாள்,, எல்லோரும் ஹோட்டலில் சாப்பிட்டு வெளியே வந்தபோது, முதன்முதலில் மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு போய், மான்சி விளக்கேற்றிய பிறகு இருவரும் பாழும் பழமும் சாப்பிட்டுவிட்டு, மறுவீடு நடத்த மான்சியின் ஊருக்கு போகவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதும், சத்யன் தனது வீட்டுக்குத்தான் போகவேண்டும் என்று சொன்னான்

ஆனால் அங்கிருந்த அத்தனை பேரும் அவன் அம்மா வாழ்ந்து மறைந்த கிருபாவின் வீட்டில்தான் மான்சி விளக்கேற்ற வேண்டும் என்றார்கள்,,

சத்யனுக்கு தான் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டு இருக்கிறோமோ என்ற எண்ணம் மனதுக்குள் உருவானது , ஆனாலும் தன் தாயை அனைவரும் முன்நிறுத்தி பேசியதால் அவனால் மறுக்கமுடியவில்லை, திரும்பி மான்சியை பார்த்தான்,, அவள் பார்வையால் கெஞ்சினாள்,,

அந்த பார்வைக்கு அவனால் மறுப்பு சொல்லமுடியவில்லை,, அதன்பிறகு சத்யன் எதுவுமே பேசவில்லை அவளின் கையைப்பற்றிக் கொண்டு காரில் ஏறியமர்ந்தான்,, மூன்று கார்களில் அனைவரும் கிருபாவின் வீட்டுக்கு கிளம்ப,, ரஞ்சனா எல்லாருக்கும் முன்பே போய் மணமக்களுக்கு தேவையானதை தயார்செய்தாள்



காரில் சத்யன் ரொம்ப இறுக்கமாகவே அமர்ந்திருந்தான்,, மான்சியிடம் கூட பேசவில்லை,, முன் சீட்டில் டிரைவருக்கு பக்கத்தில் அமர்திருந்த கார்த்திக்கு சத்யனின் இந்த அமைதி ரொம்ப சங்கடமாக இருந்தது,,

அங்கிருந்த சூழல் கல்யாணம் முடித்து காரில் போவது போல் இல்லை,, ஏதோ நடக்ககூடாதது நடந்துவிட்டது போல் மூவருமே அமைதியாக இருந்தனர், மான்சி சத்யனை பார்த்தாள், அவன் விஷயத்தை விழுங்குவது போல முகத்தை வைத்திருந்தான்,,

அவன் முகத்தை பார்க்க மான்சிக்கு பயமாக இருந்தது,, ஆனால் தனது பயத்தை வெளிக்காட்டினாள் காரியம் கெட்டுவிடும் என்று புரிந்ததால் இதழ்களில் வரவழைத்த புன்னகையோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்

மான்சி தன் தோளில் சாய்ந்ததும், அதுவரை இறுகிப்போய் அமர்ந்திருந்த சத்யன் இலகுவாகி சற்று சரிந்து அமர்ந்து அவள் தோளில் கைப் போட்டு வளைத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான், அவன் நெஞ்சின் துடிப்பை அவள் கன்னத்தில் உணர்ந்தாள்,

அவள் சத்யனின் கைக்குள் வந்ததும் அவன் அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் குறைந்து நிம்மதியாக சீட்டில் சாய்ந்து கொண்டான்,, அவனுடைய காதல் தேவதை மட்டும் தன் அருகிலேயே இருந்தால் எதையும் சுலபமாக சமாளித்து விடலாம் என்று மனசுக்குள் ஒரு நிம்மதி வந்தது



அதற்குள் கிருபாவின் வீடு வந்துவிட்டது, டிரைவர் ஒரு பக்கமும் கார்த்திக் மறுபக்கமும் காரின் கதவை திறந்துவிட்டு இவர்கள் இறங்குவதற்காக காத்திருக்க, மான்சி இறங்கினாள், சத்யன் காரிலிருந்து இறங்கவில்லை, கார்த்திக் மான்சியின் முகத்தை கவலையுடன் பார்க்க, மான்சி காரின் மறுபக்கம் போய் குனிந்து உள்ளே இருந்த சத்யனை நோக்கி தனது வலதுகையை நீட்டினாள்

சத்யன் முகத்தில் இனம் காணமுடியாத பல உணர்ச்சிகள் தோன்றி மறைந்தது,, தன்னை மீறிய பெருமூச்சுடன் மான்சியின் கையைப் பற்றியவாறு காரில் இருந்து இறங்கினான்,,

பின்னால் வந்த கார்களில் இருந்து மான்சி வீட்டாரும், சத்யனின் தங்கைகளும் பாட்டியும் இறங்கினார்கள், சத்யன் பாட்டியைப் பார்த்தான்,, அமிர்தம்மாள் வேகமாக வந்து அவன் கையை பற்றிக்கொண்டு “ எல்லாமே உன் அம்மாவோட ஆசைன்னு நெனைச்சுக்கிட்டு உள்ள போ சத்யா, நல்லதே நடக்கும்” என்றார்

சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு மான்சி கிருபாவின் வீட்டு வாசலில் நிற்க்க, சுமங்கலிப் பெண் ஒருவர் ஆரத்தி தட்டுடன் வந்தாள்

பின்னாலிருந்த மான்சியின் தாய்மாமன் மனைவி “ மொதமொதல்ல வீட்டுக்கு வர்ற மருமகளுக்கு மாமியார்தான் ஆரத்தி சுத்தனும், நீங்க வாங்கி சுத்துங்க” என்று ரஞ்சனாவை பார்த்து சத்தமாக கூற,,



ரஞ்சனா மிரண்டு போய் பாட்டியை பார்த்தாள், பாட்டி கண்ணசைவில் ம்ம் என்று உத்தரவிட, நடுங்கும் கைகளுடன் ஆரத்தி தட்டை வாங்கி மணமக்களுக்கு சுற்றினாள் ரஞ்சனா,, ஆரத்தி நீரை விரலில் தொட்டு மான்சியின் நெற்றியில் வைத்தவள், மறுமுறை நீரைத் தொட்டு சத்யனின் நெற்றியை நெருங்க அவள் கை நடுங்கியது சத்யனின் கண்முன்னே தெரிந்தது,, சத்யன் மான்சியின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டான்,,

விரல் தொட்ட நீரை சத்யனின் நெற்றியில் வைத்த ரஞ்சனாவின் மனதில் ஆயிரமாயிரம் வேண்டுதல்கள், மகனை வீட்டுக்கு வரவழைத்த கடவுளுக்கு இருந்த இடத்திலிருந்தே நன்றி சொன்னாள்

வீட்டுக்குள் போன மணமக்களை பூஜை அறைக்கு அழைத்து சென்றார் பாட்டி, தெய்வலோகம் போல் இருந்த பூஜையறையில் தனது தாயின் பிரமாண்டமான படத்தை பார்த்ததும் சத்யனின் வயறு தடதடவென்று உதறியது, நெஞ்சை அடைக்க கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது, உதட்டை கடித்து கண்ணீரை அடக்கினான்,

அந்த பூஜையறையில் தாயின் படத்துக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரமும் பூஜைகளும் அவன் அம்மாவுக்கு இன்னும் அந்த வீட்டில் சகல மரியாதையும் இருக்கிறது என்று சத்யனுக்கு புரிந்தது

மான்சி பூஜையறையில் விளக்கேற்றி வைக்க இருவரும் விழுந்து வணங்கினார்கள், பிறகு வெளியே வந்து சோபாவில் அமர்ந்தனர், அவர்களின் இருபுறமும் அபிநயாவும் வசுவும் உரிமையுடன் அமர்ந்துகொண்டனர், சத்யன் தன்னருகே இருந்த அபியை கையைப் பற்றிக்கொண்டு அமைதியாக இருந்தான்,



அபிநயாவுக்கும் அவனது மனசு புரிந்திருக்க வேண்டும், அவன் தோளில் சாய்ந்து “ மறுக்காம இங்கே வந்ததுக்கு தாங்க்ஸ் அண்ணா,, என்றாள்

சத்யன் “ ம்ம்” என்றது தவிர வேறு எதுவும் சொல்லவில்லை,,

சத்யன் மான்சி இருவருக்கும் பாலும் பழமும் தரப்பட்டது, அதன்பிறகு கொஞ்சநேரம் இருந்துவிட்டு எல்லோரும் கிளம்ப ஆயத்தமான போது ரஞ்சனா ஒரு மரப் பெட்டியை எடுத்துவந்து மான்சியிடம் கொடுத்து “ இதுல வசந்தி அக்காவோட நகைகள் எல்லாம் இருக்கு, எல்லாமே உனக்கு சேரவேண்டியது, நீ போட்டுக்க மான்சி” என்றாள்

“ வேனாம் அத்தை இங்கயே இருக்கட்டும்” என்று மான்சி கூற,,

அவள் வாயை தன் விரல்களால் பொத்திய ரஞ்சனா “ ம்ஹூம் வேண்டாம்னு சொல்லாதே,, இதெல்லாம் உனக்கு சேரவேண்டியது எடுத்துட்டு போ” என்று வற்புறுத்தினாள்,, ரஞ்சனாவுடன் பாட்டியும் சேர்ந்து கொள்ள, மான்சி வேறு வழியின்றி பெற்றுக்கொண்டாள்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!