மனசுக்குள் நீ – பாகம் 44

சத்யன் மான்சி இருக்கும் வீட்டை நோக்கி பறந்தான் என்றுகூட சொல்லலாம், அனிதாவின் தோழி வீடு என்பதால் சத்யனுக்கு அந்த வீடு தெரியும், அந்த தெருவில் நுழைந்து காரை நிறுத்திவிட்டு இறங்கும் போது சந்தடிகள் அடங்கியிருந்தது, கீழ் வீட்டில் ஒன்பது மணிக்கான சீரியல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது 

சத்யன் கீழ் வீட்டில் விசாரிக்கலாமா என்று நினைத்து அந்த முடிவை உடனே கைவிட்டு பக்கவாட்டில் இருந்த படிகளில் தடதடவென்று ஏறினான்,



வரண்டாவை கடந்து மொட்டை மாடியில் ஓரமாக இருந்த அறைக்கதவை தட்டும்போது ஏனோ சத்யனின் கைகள் நடுங்குவது போல இருந்தது
உள்ளே இருந்து எந்த பதிலுமில்லை, சத்யன் மறுபடியும் கதவை தட்டினான்,

வெகு நேரம் கழித்து “ யாரது” என்ற மான்சியின் குரல் கமறலாக ஒலிக்க, அப்போதுதான் சத்யனுக்கு மூச்சே வந்தது, அவசரமாக “ நான்தான் மான்சி கதவை திற” என்றான் சத்யன்

அடுத்த நொடி கதவு திறக்கப்பட , உடனே உள்ளே நுழைந்தான் சத்யன்
அவன் எதிரே இருந்த மான்சியை பார்த்து அதிர்ந்துபோனான், அழுதழுது முகம் சிவந்து வீங்கி, அதிக கண்ணீர் சிந்திய காரணத்தால் கண்ணின் ரப்பைகள் தடித்து, மூக்குநுனி கொவ்வை பழமாக சிவந்து, பலநாட்கள் பட்டினி கிடந்து சோர்ந்து போனவள் போன்ற அவளது தோற்றம் அவனுக்கு திகிலை ஏற்ப்படுத்த “ என்னாச்சும்மா” என்றான் அக்கரையுடன்

அந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்தவள் போல “ சத்யா” என்ற ஒரு சிறு கூவலுடன் ஓடிவந்து அவன் நெஞ்சில் விழுந்து கேவினாள்.



வாஞ்சையுடன் அவள் தலையை கோதியவன் “ என்னாச்சுடா கண்மணி,, ஏன் செல்லை ஆப் பண்ணி வச்சிருந்த, மும்பைல இருந்து வந்ததும் உன்னை பத்தி ஒரு தகவலும் இல்லாம ரொம்ப பயந்து போய்ட்டேன்,, என்னதான் ஆச்சு மான்சி ” என்று கேட்டு தனது மனதை அவன் விரல்களின் வருடலில் காண்பித்தான்
அவன் நெஞ்சில் முகம் வைத்து அழுதவள் “ என்னோட மாமா பையன் சிவசு இங்கே என்னை தேடிக்கிட்டு வந்துட்டான்,, அது மட்டுமில்ல என்னை கண்டுபிடிச்சுட்டான்” என்றாள் கண்ணீர் குரலில்

சத்யனின் உடலில் சட்டென்று ஒரு விறைப்பு ஏற்ப்பட்டதை மான்சியால் உணரமுடிந்தது, அவளை அணைத்திருந்தவன் தன்னோட இறுக்கினான், “ அவனை எப்போ எங்கே பார்த்த?” என்றான்

முரட்டுத்தனமாக பற்றியிருந்த சத்யனின் படியிலிருந்து மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட மான்சி சத்யன் கைபிடித்து கட்டிலில் உட்கார வைத்துவிட்டு அவளும் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்,

“ விபரமா சொல்றேன் கேளுங்க, நேத்து நான் மில்லில் இருந்து வெளிய வந்தப்ப, அங்கே இருக்குற பொட்டிக்கடையில் நின்னு சிகரெட் பிடிச்சிகிட்டு இருந்தான், அவனை பார்த்ததும் பயந்துபோய் மறைஞ்சு மறைஞ்சு வந்தேன் ஆனா அவனுக்கு நான் வேலை செய்யும் மில், இந்த வீடு, என்னோட மொபைல் நம்பர், என்று எல்லாமே தெரிஞ்சுருக்கு எப்படின்னு தெரியலை, ஊர்ல யாரையாவது விசாரிச்சானான்னு தெரியலை,,



நேத்து நைட் சாப்பிட்டு படுக்க வந்து ஜன்னலை மூடலாம்னு வந்தா வெளிய எதிர் பக்கம் இருக்குற மரத்தடியில் ரெண்டு பேரோட நின்னு இங்கயே பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கான், நான் பயந்துபோய் ஜன்னலை மூடிட்டேன், அதோட என் மொபைல் அடிச்சுது எடுத்து யாருன்னு கேட்டேன், கதவை தொறந்த வெளிய வர்றியா,, இல்ல நான் உள்ள வரவான்னு சிவசு கேட்டான்,

உடனே செல்லை ஆப் பண்ணிட்டேன், நைட்டெல்லாம் தூங்கலை, காலையில எழுந்து பார்த்தப்ப அவனுங்க இல்ல , நான் இதைப் பத்தி யார்கிட்டயும் சொல்லலை, கீழ் வீட்டுல குடுத்த சாப்பாட்டை கூட சாப்பிடலை, அழுதுகிட்டே இருந்தேன் தெரியுமா?” என்று அழுகையும் விம்மலுமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் மான்சி

அவள் சொல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்,, பிறகு கையை அவளை நோக்கி நீட்டினான் “ ஏன் மான்சி, எனக்கு கால் பண்ணி சொல்லியிருக்கலாமே,, என்றவன், பற்களை கடித்தபடி “ அவனை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்” என்று கூறிவிட்டு எழுந்தான்

“ அய்யோ அதெல்லாம் வேண்டாம்” மான்சி அவன் கைகளை பற்றிக்கொண்டாள்

“ இதோ பாருங்க இது நானும் அவனும் மட்டுமே சம்மந்தப்பட்டது இல்லை, எங்க பேமிலி, என் மாமா பேமிலி, என ரெண்டு வீட்டு குடும்பமும் சம்மந்தப்பட்ட பிரச்சனை, இன்னிக்கு நீங்க இதுல தலையிட்டு பிரச்சனை பெருசான ரெண்டு குடும்பத்துக்கு தான் அசிங்கம், இல்லேன்னா நான் நேத்தே அவன் மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திருப்பேன், எங்க குடும்ப உறவுகள் பாதிக்ககூடாதுன்னு தான் அமைதியா இருந்துட்டேன், இதோ பாருங்க மனிதப்பிறவி மகத்தானது,



இனிமே நாம நெனைச்சாலும் மனிசனா பொறப்பமான்னு நமக்கே தெரியாது, அப்படியிருக்க இந்த ரத்த சம்மந்தமான உறவுகளிடம் விரோதத்தை வளர்த்து என்ன பிரயோஜனம், இருக்கும் வரை அன்போட நட்போட வாழ்ந்துட்டு போகவேண்டியது தான், இதுக்கு முன்னாடி வரைக்கும் எல்லாரும் ரொம்ப அன்பா இருந்தவங்க, ஆனா இப்பத்தான் எல்லாம் மாறிப்போச்சு,,

ஆனா இதுவும்கூட ஒருநாளைக்கு மாறிவிடும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு, அதனால் நீங்க எதுவுமே பண்ணவேண்டாம், என்னை யார்கூடயாவது எங்க ஊருக்கு அனுப்பி வச்சிடுங்க, அது போதும், அங்க போய்ட்டா சமாளிச்சுக்கலாம் ” என்றாள் மான்சி

அவள் கூறிய வார்த்தைகள் எல்லாமே இவனுக்காக கூறியது போல் நெஞ்சை சுட்டது, அவள் பேச்சில் இருந்த நியாயம் , அவளிடம் எதுவும் கூறாமல் தலையை குனிந்து உட்கார வைத்தது

அப்போதுதான் மான்சிக்கு அவனுக்கு உறுத்தும் அளவிற்கு பேசிவிட்டோம் என்று புரிந்தது, அவசரமாய் அவனை நெருங்கி “ அய்யோ நான் என்னோட கருத்தை சொன்னேன், அது உங்களை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுடுங்க” என்றாள் வருத்தமாக..



“ இல்ல மான்சி நீ சொன்னதுல தவறேதும் இல்லை, ஆனா நானும் ஒன்னும் கல்நெஞ்சம் படைச்சவன் இல்லை,, எங்க அப்பாவுக்கு அட்டாக வந்தப்ப நான் போகலையே தவிர என் ரூம்ல உட்கார்ந்து எவ்வளவு அழுதேன் தெரியுமா? எனக்கும் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கனும்னு எவ்வளவு ஆசைகள் இருக்கு தெரியுமா? நீயே சொல்லு அவர் எங்கம்மாவுக்கு செய்தது பெரிய துரோகம் தானே? அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஒத்துமையா இருந்தாங்க தெரியுமா,

என்னோட அந்த வயசுலயே அவங்களோட லவ் எனக்கு ரொம்ப புடிக்கும், அம்மா அப்பாவை கொஞ்சுரதை கிட்ட இருந்து பார்த்து ரசிப்பேன், அபியாவது பரவாயில்லை அம்மா படுத்த படுக்கையா இருக்கும்போதுதான் உருவாகி இருப்பாள்,, ஆனா எப்படி எங்கம்மா உயிரோட அதுவும் நோயோட அறிகுறி எதுவும் இல்லாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கும்போதே அவர் அனிதாவை உருவாக்கியிருக்கார் மான்சி இதுதான் என்னால தாங்கமுடியலை,,

எனக்கு எதுவுமே புரியாதுன்னு அவரு நெனைச்சுட்டாரு, ஆனா வளரவளர எனக்கு அவரோட துரோகத்தின் அளவு புரிஞ்சது மான்சி,, நான் சொல்றது உனக்கு புரியுதா மான்சி?” என்று அவளைப்பார்த்து கேட்க…



அவளுக்கு அவனை வாரியணைத்துக் கொண்டு அவன் சோகத்தை துடைக்கவேண்டும் போல இருந்தது,, இவன் சொல்வது இவன் தரப்பில் நியாயமாக இருந்தாலும்,, அனிதா விஷயத்தில் இவனின் கூற்று முற்றிலும் தவறானது,, ஆனால் அது எப்போது இவனுக்கு புரியுமோ தெரியலையே, என்று வருந்தினாள்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!