பொம்மலாட்டம் – பாகம் 27 – மான்சி தொடர் கதைகள்

மனைவியை தோளோடு அணைத்துச் சிரித்தான் மதி…. “அப்படியிருந்தால் சந்தோஷம் தான்…. ஆனா சத்யனோட முகத்துல சந்தோஷத்தை விட ஆர்வமே அதிகமா இருக்கு வாசு…. எதையோ தெரிஞ்சுக்கும் ஆர்வம்….” என்றவன்

“ஓகே, எதுவாக இருந்தாலும் அவனாக சொல்லும் வரை வெயிட் பண்ணலாம்… நாமாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம்” என்றபடி மனைவியை சாப்பிட அழைத்துச் சென்றான்….. ஆதியின் புத்தகக் கடை…. வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று நண்பனை அழைத்து வரும் அவகாசமின்றி காரின் ஹாரனை ஒலித்து அழைத்தான்….



சப்தம் கேட்டதும் வெளியே வந்த ஆதி “ரெண்டு நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுடா” என்று கூறி மீண்டும் உள்ளே சென்றுவிட்டான்… அந்த இரண்டு நிமிடம் இரண்டு யுகங்கள் போல் கடந்து சென்றது…. ஆதி வந்து காரில் ஏறியதும் “எவ்வளவு நேரம்டா?” என்று சலித்தவனை வியப்புடன் பார்த்த ஆதி “ரெண்டே நிமிஷம் தான்டா” என்றான்….

வேகமெடுத்த கார் சத்யனின் மனநிலையைச் சொல்ல….. சிரிப்பினை அடக்கிக்கொண்டு அமைதியாக வந்தான் ஆதி…. மான்சியின் வீடு இருக்கும் பகுதி மறக்காமல் ஞாபகத்திலிருக்க மிகச் சரியாக காரைச் செலுத்தி வந்து சேர்ந்தான் சத்யன்…. “நீ கார்லயே இரு சத்யா…. நான் போய்ப் பார்த்துட்டு வந்து உன்னைக் கூட்டிப் போறேன்” என்று ஆதி கூறிய அடுத்த நிமிடம் காரை விட்டிறங்கிய சத்யன் “இல்ல நானும் வர்றேன்… மான்சி என் ஒய்ப்” என்றான் அழுத்தமாக….

எதையோ சொல்ல வந்து நிறுத்திய ஆதி… சரியென்ற தலையசைப்புடன் முன்னால் நடந்தான்… கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது…. பெல் அடித்துவிட்டு காத்திருந்தனர்….. கதவில் பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் வழியாக ஆதியைக் கண்டுவிட்டுக் கதவைத் திறந்து வழிவிட்டு ஒதுங்கி நின்ற பவானி ஆதிக்குப் பின்னால் நின்ற சத்யனைக் கண்டதும் அதிர்ந்தாள்..



“நல்லாருக்கீங்களா ஆன்ட்டி?” என்ற விசாரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான் ஆதி…சத்யன் உள்ளே நுழைய வழிவிடாமல் வழிமறித்து நின்ற பவானி “உனக்கு இங்க அனுமதியில்லை…” என்றதும்….. சத்யனின் எதிர்பார்ப்பு சட்டென்று ஆத்திரமாக உருவெடுக்க…. “அதைச் சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை….

நான் மான்சியோட புருஷன்” என்றபடி மற்றொரு கதவைத் திறந்துகொண்டு ஒருகளித்தவாறு பவானியைக் கடந்து உள்ளே நுழைந்தான்…. நுழைந்தவனின் பார்வை மான்சியைத் தேடியது…. பெரிய வீடென்றாலும் சற்று பழமையான வீடுதான்….. பிரம்பு சோபாக்களிலும் கூடத்தில் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலிலும் கலைநயம் மிளிர்ந்தது…. ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலில் கண்மூடி சயனித்திருந்தாள் அவனது காதல்க் கொள்ளைக்காரி….

அங்கிருந்தவர்களை அலட்சியம் செய்துவிட்டு ஆர்வத்துடன் அவளருகே சென்றான் சத்யன்…. தொலதொலப்பான காட்டன் பேன்ட்டும் அதேத் துணியில் முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தாள்…. கழுத்தில் இவன் அணிவித்தத் தாலி செயினில் கோர்க்கப்பட்டு வெளியே கிடந்தது…. கைகளில் தங்கக் காப்பு… காதுகளில் சிறிய ஜிமிக்கிகள்…. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிதானமாக ரசித்தான்…



கர்ப்பிணியின் கன்னச் செழுமை…. மஞ்சள் நிறத்தில் சற்று உப்பலாக…. சிறு சிரிப்புடனேயே உறங்கினாள் போல… கன்னங்கள் இரண்டும் குழிந்திருந்தது….. இயற்கையான அவளின் இதழ்ச் சிவப்பு இவன் இதயத்தை தடுமாறச் செய்தது…. காற்றுக்கு ஊஞ்சல் ஆடக் கேள்விப்பட்டிருக்கிறான்… காற்றையே சுமந்தாடும் ஊஞ்சலை இன்றுதான் பார்த்தான்…

ஊஞ்சலைப் பிடித்தபடி மான்சியின் தலைப்பக்கமாக மண்டியிட்டான்… அவளது நெற்றிக் கூந்தலை மெண்மையாக ஒதுக்கியவனின் கண்களில் நீர் நிறைந்தது… ‘இவளை வெளியேற்ற எனக்கெப்படி மனம் வந்தது? ஒரு கணவனாக இருக்க முடியாவிட்டால் போகிறது…. தாயாக இருந்திருக்கலாம் அல்லவா?’ தனது செயலை நினைத்து வெட்கியவனாக அவளது நெற்றியை வருடியவன் “மான்சி……” என்று மென்மையாக அழைத்தான்…

“அவ தூங்குறா எழுப்பவேண்டாம்” கடுமையாக எச்சரித்தது பவானியின் குரல்….பவானி என்றதொரு நபரே இல்லாததுபோல் அலட்சியம் காட்டிய சத்யன் மீண்டும் அழைத்தான் “கண்ணம்மா…..” என்று காதலாக… அவசரமாக வேறு பக்கம் திரும்பி தனது விழி நீரை சுண்டிய ஆதி சிவந்த விழிகளுடன் அமைதியாக இருக்கும்படி பவானியை கெஞ்சுதலாகப் பார்த்தான்….



மான்சி கண்விழிக்கவில்லை என்றதும் இன்னும் நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு “உன் அத்தான் வந்திருக்கேன் கண்ணம்மா” என்றான்… இதைச் சொல்லும்போது அவனது குரல் தழுதழுத்தது…. லேசாக விழி திறந்தவள் அருகேத் தெரிந்த சத்யனைக் கண்டு அஞ்சி மிரண்டு அவனது மார்பில் தனது இருகைகளையும் ஊன்றி அவனை பின்னால் தள்ளியபடி வேகமாக எழுந்தாள்….

மான்சி தள்ளிய வேகத்தில் பின்னால் சரிந்து மல்லாந்து விழுந்த சத்யனை பதட்டத்துடன் ஆதி வந்து தூக்கும் முன்பு மான்சியே அவனருகே மண்டியிட்டு அமர்ந்து ஊற்றுப் பார்த்து “அத்தான்………….” என்று உற்சாகமாகக் கத்தினாள்… கீழே கிடந்த சத்யனுக்கு அவள் அடையாளம் கண்டுகொண்டதில் அளவில்லாத சந்தோஷம்…. இரு கைகளையும் விரித்து நீட்டினான்….

“அத்தான்………” என்றபடி மண்டியிட்ட நிலையில் அவனது மார்பில் கவிழ்ந்தாள் மான்சி… சத்யனைத் தூக்கிவிட வந்த ஆதி ஒதுங்கி நின்றான்…. கண்கலங்க மனைவியை அணைத்த சத்யனைக் கண்டு பவானிக்கும் கண்கள் கலங்கியது…. “ம் ம் அத்தான் தான்டா…. வந்துட்டேன்” என்ற சத்யன் அவளது இரு கைகளையும் எடுத்து தனது கன்னத்தில் பதித்துப் பிறகு உள்ளங்கையில் முத்தமிட்டு “ஸாரிடா” என்று தழுதழுத்தவன் அவளது கையாலேயே தனது இரு கன்னத்திலும் அடித்துக்கொண்டான்…



பவானி பதட்டமாக அருகில் வந்து நிற்க… ஆதி நண்பனின் தோளில் கை வைத்து “மான்சி பயந்துடப் போறா சத்யா” என்று ஞாபகப்படுத்துவது போல் மெல்லியக் குரலில் கூறினான்…. அவனது மன்னிப்பும் கண்ணீரும் மான்சியின் மனதில் பதியவில்லை போல…. சத்யனின் முகத்தையே வருடிக் கொண்டிருந்தாள்….

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!